மியூசிக் போட மாட்டேன்!. பாக்யராஜிடம் கோபப்பட்ட இளையராஜா!.. முந்தானை முடிச்சி பிளாஷ்பேக்!...
பாக்யராஜ் ஆரம்பத்தில் நடித்த மற்றும் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாக்யராஜுக்கும், இளையராஜாவும் இடையே ஈகோ பிரச்சனை வந்தது. அதற்கு காரணம் கங்கை அமரன். அதாவது பாக்யராஜ் இயக்கி நடித்த மௌன கீதங்கள் படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்தார். அதேபோல், ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்திற்கு முதலில் கங்கை அமரனைத்தான் இசையமைப்பாளராக போட்டார்கள்.
ஆனால், படம் முழுக்க கிராமத்தில் நடப்பதால் இது இளையராஜா இசையமைத்தால் மட்டும் சரியாக இருக்கும் என பாக்யராஜுக்கு தோன்றியது. எனவே, இளையராஜாவிடம் போய் அவர் கேட்க ‘நான் உங்கள் படத்திற்கு மியூசிக் போட மாட்டேன்’ என சொல்லிவிட்டார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள பாக்யராஜ் ‘கங்கை அமரனை மியூசிக் டைரக்டராக போட்டதால் அவருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் என்னிடம் முதலில் வரவில்லையே.. அமரனைத்தானே மியூசிக் போட சொன்னீர்கள்.. அவனையே பண்ண சொல்லுங்க’ என்றார். ‘உங்கள் தம்பிதானே.. இதற்காக கோபப்படலாமா?’ என்று அவரை சமாதானம் செய்தேன்.. ‘தொழிலில் அண்ணன் தம்பி எல்லாம் கிடையாது.. எல்லாம் ஒன்னுதான்’ என்று கோபப்பட்டார். அப்புறம் ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து அந்த படத்தில் இசையமைக்க வைத்தேன். முந்தானை முடிச்சு படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் ஒரு காரணம்’ என பாக்யராஜ் கூறியிருக்கிறார்..
அதேபோல் அடுத்து பாக்யராஜ் இயக்கி நடித்த சில படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. இளையராஜாவின் ஈகோவை பார்த்து கோவப்பட்ட பாக்யராஜ் ‘அது என்ன அவ்வளவு கஷ்டமா!. நானே இசையமைக்கிறேன்’ என சொல்லி இசையை கற்றுக்கொண்டு இது நம்ம ஆளு உள்ளிட்ட சில படங்களுக்கு அவரே இசையமைத்தார். அதேபோல் எங்க சின்ன ராசா உள்ளிட்ட சில படங்களுக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
