Nayagan: 50 ஆயிரம் பேசி 6 லட்சம் சம்பளம் வாங்கிய ஜனகராஜ்!.. நாயகனில் நடந்த சம்பவம்!..
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கமலின் சினிமா கெரியரில் இது ஒரு முக்கிய படமாக அமைந்ததோடு தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் நாயகனும் இடம் பிடித்தது.
விமர்சனரீதியாக பலரின் பாராட்டை பெற்றது இப்படம். மும்பையில் தமிழர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த வரதராஜ முதலியார் என்பவரின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை, திரைக்கதையை மணிரத்தினம் உருவாக்கியிருந்தார். கமலும் மிகச் சிறப்பான நடிப்பை இந்த படத்திற்காக கொடுத்திருந்தார்.
இந்த படத்தின் கமலின் நண்பராக படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் பல காட்சிகளில் ஜனகராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்..
இந்த படத்தை தயாரித்தவர் முத்தா இராமசாமி. இந்நிலையில், முத்தா ராமசாமியின் தம்பி மகள் அதாவது முக்தா சீனிவாசனின் மகள் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது இந்த படம் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்தை தயாரிப்பது என என் பெரியப்பா முடிவு செய்ததும் ஜனகராஜிடம் பேசினார். ஏற்கனவே என் பெரியப்பா தயாரித்த சில படங்களில் ஜனகராஜ் நடித்திருந்ததால் இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. ஜனகராஜ் 5 நாட்கள் மட்டுமே நடித்தால் போதும் என மணிரத்னத்தின் உதவியாளர் கூறினார். எனவே, அவர் ஒரு லட்சம் சம்பளம் கேட்டார். ஆனால் என் பெரியப்பாவோ ‘ரூ.40 ஆயிரம் கொடுக்கிறேன்’ என்றார். அதன்பின் ‘50 ஆயிரம் கொடுங்கள்’ என ஜனகராஜ் பேசி முடித்தார்.
‘சரி மொத்தம் 5 நாட்கள் மட்டும் நீ நடித்தால் போதும்.. தினமும் 10 ஆயிரம் கொடுத்து விடுகிறேன்’ என சொல்ல ஜனகராஜ் சம்மதித்தார். ஆனால் படத்தின் சூட்டிங் துவங்கிய பின் ஜனகராஜின் கதாபாத்திரம் மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தம் 60 நாட்கள் அந்த படத்தில் அவர் நடித்தார்.
எனவே என் பெரியப்பா அவருக்கு சம்பளமாக ரூ.6 லட்சம் ரூபாய் கொடுத்தார். என் பெரியப்பா எப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அவரை பார்த்தவுடன் ஜனகராஜ் ‘தெய்வமே நான் வந்துவிட்டேன் தெய்வமே’ என்று சொல்லி ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார்’ என அவர் சொல்லியிருக்கிறார்.
