15 கோடியில் தொடங்கி 43 கோடியில் வந்து நின்ற தசாவதாரம்
தமிழ் திரையுலகில் சிவாஜிக்கு பின் நடிப்பில் வித்யாசத்தை காட்டுபவர் கமல்ஹாசன். அவரது நடிப்பில் வந்த ராஜபார்வை, அபூர்வ சகோதர்ர்கள், மைக்கேல் மதன காமராஜன், அன்பே சிவம் மற்றும் அவ்வை சண்முகி என சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தசவதாரம் படத்தில் வித்யாசமான 10 வேடங்களில் நடித்து அசத்தினார்.

தமிழ் திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா உலகிலுமே ஒரு நடிகர் பத்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, அதனை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியாக்கிக் காட்ட முடியும் என்பதை நிறுபித்த படம்தான் தசாவதாரம் . கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இத்திரைப்படம் கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் அதாவது ஜூன் 13ம் தேதி வெளியானது.
இப்படத்தில் பத்து கதாபாத்திரங்களை ஏற்று, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உடல்மொழி, குரல், நடை, பாவனை எனப் பிரித்துக் காட்டி உலகையே வியக்க வைத்தார் கமல்ஹாசன். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் வடிவமைப்பில், ப்ராஸ்தெடிக் மேக்கப் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதற்காக தினமும் 6 முதல் 9 மணி நேரம் மேக்கப் போடுவதற்கும், அதை எடுப்பதற்கும் மட்டுமே கமல்ஹாசன் செலவிட்டார்.

தசவதாரம் படத்தினை வானத்தை போல, ரமணா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்தார். முதலில்ரூ. 15 கோடி பட்ஜெட் என்று துவங்கப்பட்ட இப்படம், பிரமாண்ட ஐடியாக்கள், தொழிஒல் நுட்பம் என பயன்படுத்தப்பட்டதால் ஒரு கட்டத்தில் ரூ 43 கோடிக்கு வந்து நின்றது. ஆனாலும் படத்தின் மீதான நம்பிக்கை தயாரிப்பாளர் செலவு செய்தார். அந்த காலகட்டத்தில் இந்த பட்ஜெட் என்பது மிக அதிகம். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இந்திய அளவில் மட்டும் வசூல் ரூ 68 கோடியை தாண்டியது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தினை இப்படம் பெற்றுகொடுத்தது.
