ஒரு சிறு தவறு நடந்தாலும் …! நாடோடி தென்றல் ரெக்கார்டிங் அனுபவத்தை பகிர்ந்த மால்குடி சுபா
தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டு வெளியான படம் நாடோடி தென்றல். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், நவரச நாயகன் கார்த்திக், ரஞ்சிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாகக் கொண்ட ஒரு முக்கோணக் காதல் கதையாகும்.
இந்த காவியத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் இலையராஜாவே எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மாபெரும் ஹிட்டாகின. குறிப்பாக, படத்தின் கதைக்களம் பிரிட்டிஷ் காலத்துப் பின்னணியைக் கொண்டிருந்ததால், இப்படத்தில் ஒரு ஆங்கிலப் பாடலும் இடம்பெற்றிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் இளையராஜா இசையில் நாடோடி தென்றல் படத்தில் இடம்பெற்ற All the time என்ற அந்த ஆங்கிலப் பாடலை தனது தனித்துவமான குரலால் பாடியவர் பிரபல பின்னணிப் பாடகி மால்குடி சுபா. பல பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ள அவர், சமீபத்தில் இந்தப் பாடல் ரெக்கார்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியபோது, நாடோடி தென்றல் படத்துக்காக ஒரு ஆங்கிலப் பாடல் பாட வேண்டும் என்று இளையராஜா சார் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். ரெக்கார்டிங்கின் போது ஒரு சின்ன சவால் இருந்தது. பாடும்போது இடையில் ஒரு முறை தப்பாகப் பாடிவிட்டாலும், திருத்திக் கொண்டு மீண்டும் முதலிலிருந்து முழுப் பாடலையும் பாட வேண்டும்.
அப்படி ஒரு கடினமான சூழ்நிலையிலும், கவனமாகப் பாடி அந்தப் பாடலை வெற்றிகரமாக முடித்தேன். எனது இசைப் பயணத்தில், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய அனுபவத்தை எனக்குத் தந்த பாடல் அந்த ஆல் தி டைம்' பாடல்தான் என்று கூறியுள்ளார்.
