முள்ளும் மலரைப் பார்த்த எம்ஜிஆர்... அடுத்த 15 நிமிடம் மகேந்திரனிடம் சொன்னது இதுதான்..!
கதாசிரியரும், இயக்குனருமான மகேந்திரனை சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு வந்ததில் எம்ஜிஆரின் பங்கு மிகப்பெரியது. அப்படி தன்னால் அழைக்கப்பட்ட மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தை எம்ஜிஆர் ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தார். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஏறக்குறைய 15 நிமிடங்கள் மகேந்திரனைப் பாராட்டி இருக்கிறார். உங்களுடைய படத்தைப் பார்த்ததற்குப் பின்னாலே எனக்கு பேச்சே வரலங்கறதுதான் உண்மை. மிகப்பெரிய திருப்புமுனையை இந்தப் படத்தின் மூலம் உருவாக்கி இருக்கிறீர்கள்.
என்னைப் போன்றவர்கள் ஆசைப்பட்டாலும் செய்ய முடியாத சாதனையை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். பத்திரிகையாளர்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பாராட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் சொல்றேன். சினிமா ஒரு விஷூவல் மீடியா என்பதை பொட்டில் அறைந்த மாதிரி நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அன்னைக்கு அழகப்பா கல்லூரியில் ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் என் முன்னால் பேசினீங்க.
இன்றைக்கு ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதை செயலில் காட்டி இருக்கிறீர்கள். இதுக்கு முன்னால அண்ணன், தங்கை பாசத்தை வைத்து வந்த தமிழ்ப்படங்கள் எல்லாமே நாடகத்தனமாகத்தான் இருந்தன. நான் நடித்த படங்கள் உள்பட. ஆனால் முள்ளும் மலரும் படம் பழைய பாணி படங்களில் இருந்து விலகி நிஜத்தில் உயர்ந்தும் நிற்கிறது. அதுவும் அந்தப் படத்தின் கடைசி காட்சி. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. இந்திய சினிமாவுக்கே புதியது என்று மகேந்திரனை மனதாரப் பாராட்டி இருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
