குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் என்றும் அவருடைய இசைத்திறனுக்கு எத்தனை இசை ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அப்படிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலையே ஒரு காலகட்டத்தில் விமர்சித்தவர்கள் பலர் இருக்காங்க.
இதை எம்ஜிஆரே ஒரு விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். சங்கராபரணம் படத்திலே மிகச்சிறப்பாகப் பாடியதற்காக குடியரசுத்தலைவரின் விருதும், பாராட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைத்தது. அப்படி விருது கிடைத்த போது சென்னையிலே அதையொட்டி ஒரு பாராட்டு விழா அவருக்கு நடந்தது.
அந்த விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று இந்த விழாவில் பாராட்டு பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் பதிவு முடிந்து அதை நான் கேட்டுக் கொண்டு இருந்த போது இந்தக் குரல் எல்லாம் சினிமா உலகத்திலே எங்கே எடுபடும் என்று என் காதுபடவே விமர்சித்தவர்கள் பலர் உண்டு.
அந்த விமர்சனங்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய குரலை நான் பயன்படுத்தினேன். ஆனால் அன்றைக்கு யார் யாரெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் பின்னாளில் எஸ்.பி.பி.யை தங்களது படங்களில் பாட வைத்தார்கள். அப்படிப் பாட வைத்ததுதான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாதனை என்று பாராட்டினார் எம்ஜிஆர்.
