எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே வளர்ச்சி அடைய முடியும். அப்படி படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர் தான் எம்ஆர்.ராதா. ராஜாம்பாள் நாடகக் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.
அங்கு சின்ன சின்ன வேடங்களை ஏற்று நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது ராஜாம்பாள் நாடகக் கம்பெனியில் பதிபக்தி என்ற நாடகம் நடந்தது. அதில் கங்காதரன் என்ற வில்லன் வேடம் ஏற்று நடித்தார் எம்எஸ்.முத்துக்கிருஷ்ணன். அவரது நடிப்புக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது என்ற வகையில் அருமையாக நடித்தார்.
ஒரு காலகட்டத்தில் முத்துக்கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. பதிபக்தி நாடகத்தை அப்படியே நிறுத்திட்டு வேறொரு நாடகத்தை நடத்தலாம்னு ராஜாம்பாள் நாடகக்குழுவினர் முடிவு செய்தனர். அப்போது அந்தக் கம்பெனி முதலாளியை அழைத்த முத்துக்கிருஷ்ணன் என்னை விட சிறப்பாக இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்குற நடிகர் நம்மகிட்டேயே இருக்காரு. அவரு பேரு எம்.ஆர்.ராதா.
அவரைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றார் முத்துக்கிருஷ்ணன். அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராஜாம்பாள் நாடகக் கம்பெனியின் முதலாளிக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ஆனாலும் முத்துக்கிருஷ்ணன் சொல்றாரே என்பதற்காகத் தான் பதிபக்தி நாடகத்தில் அந்த கங்காதரன் வேடத்தில் எம்ஆர்.ராதாவை நடிக்க வைத்தார். ஒரே நாடகம்தான்.
அந்த ஒரே நாடகத்திலேயே தான் எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை எம்ஆர்.ராதா முழுமையாக நிரூபித்தார். அதன் காரணமாகத்தான் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அதைத் தொடர்ந்து அவருக்குத் தேடி வந்ததுதான் 'நடிகவேள்' என்ற பட்டம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
