3 கோடி சம்பளம்... ஆனாலும், கமல் படத்துக்கு நோ சொன்ன மிஷ்கின்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைல் வைத்திருப்பவர் தான் இயக்குநர் மிஷ்கின். இவரது 'நந்தலாலா, அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, ஓநாயும் ஆட்டுக்கட்டியும்' போன்ற படங்களுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
மிஷ்கின் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை வைத்து எடுத்திருக்கும் 'ட்ரெயின்' மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து எடுத்துள்ள 'பிசாசு 2' ஆகிய இரண்டு புதிய படங்களும் ரெடியாகி வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.
சமீபத்தில், மிஷ்கின் கொடுத்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'உலக நாயகன்' கமல்ஹாசன் குறித்து பேசுகையில் "'நந்தலாலா' படம் ரிலீஸுக்கு பிறகு நல்லாருக்குன்னு கேள்விப்பட்டு எனக்கு போன் பண்ணி படத்தை பார்க்கணும்ன்னு சொன்னார்.
நான் படத்தை திரையிட்டு காண்பித்தேன். பார்த்துட்டு மறுநாள் வர சொன்னார். நான் போனபோது, மிஷ்கின் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்ன்னு சொன்னார். நான் மூன்று ஐடியாக்கள் சொன்னேன். அவருக்கு மூன்றாவதாக சொன்ன ஐடியா பிடிச்சிருக்குன்னு சொன்னார். புத்தர் பல்லை மையமாக வச்சு பண்ண கதை அது.
எனக்கு அட்வான்ஸ் கொடுத்து, அப்பவே அந்த படத்துக்காக 3 கோடி சம்பளம் பேசியிருந்தாங்க. ஒரு 40 நாட்களில் மொத்த திரைக்கதையும் முடிச்சாச்சு. அதுக்கு அப்புறம் ஒரு சின்ன நிகழ்வு நடந்துச்சு. அதை நான் இங்கு சொல்ல முடியாது. எனக்கு அதில் உடன்பாடில்லை, ஆகையால் உடனடியாக நான் அங்கிருந்து கிளம்பிட்டேன். எனக்கு கொடுத்த அட்வான்ஸையும் திருப்பி கொடுத்துட்டேன்" என்று கூறியுள்ளார்.
