இளையராஜாவுக்கு அவ்ளோ திமிரு இருந்தா!.. விஜயகாந்த் படத்தில் நடந்த சம்பவம்!…
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.. அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். இளையராஜாவின் மண்வாசனை மிக்க பாடல்கள் கிராமங்களிலும் ஒலித்தது. எந்த ஒரு கதை என்றாலும், கதாபாத்திரம் என்றாலும் அதற்கு உயிர் கொடுத்தார் இளையராஜா.. மனித உணர்வுகளை அவரின் பாடல்கள் அழகாக பிரதிபலித்தது. அதனால்தான் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் உருவானார்கள்..
80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது.. பல திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை அவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்தது.. எனவே அவரிடம் பாடலில் வாங்குவதற்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர்களின் ஸ்டுடியோ முன் தவம் கிடந்தார்கள்.. அவர் ஒரு கடவுளை போல பார்க்கப்பட்டார்..
பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு என்ன கதையோ அதை இயக்குனர் சொல்வார்.. அந்த கதைக்கு ஏற்ப 4 அல்லது 5 பாடல்களை இளையராஜா உருவாக்கி கொடுப்பார்.. ஆனால் சில சமயம் இளையராஜா சில பாடல்களை உருவாக்கி அந்த பாடல்களை இயக்குனர்களுக்கு கொடுத்து திரைப்படங்களில் பயன்படுத்த சொல்லியதும் நடந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள்..
இளையராஜா 6 பாடல்களுக்கான டியூன்களை உருவாக்கினார்.. இந்த ஆறு பாடல்களையும் ஒரே படத்தில் ஒரு இயக்குனர் பயன்படுத்தினால் மட்டுமே இந்த பாடல்களை கொடுப்பேன் என சொல்லிவிட்டார்.. இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கூட அதில் சில பாடல்களை கேட்டும் இளையராஜா கொடுக்கவில்லை..
இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் பாலுமகேந்திரா அதில் இரண்டு பாடல்களை மட்டும் கேட்டார்.. முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் அந்த சவாலை இருக்க ஆர்.சுந்தர்ராஜன் ஏற்றுக்கொண்டார். அந்த 6 பாடல்களுக்கும் பொருந்துவது போல ஒரு கதையை உருவாக்கினார். அப்படி உருவான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, விஜயகாந்துக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்போது வரை 70,80 கிட்ஸ்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன் ‘இளையராஜாவுக்கு ஒரு தொழில் திமிர் இருந்ததது. திமிரு இருந்தால்தான் அவர் நல்ல கலைஞன். ஒரு இயக்குனராக என் திமிரை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அவர் சொன்னதற்கு ஒப்புக்கொண்டு வைதேகி காத்திருந்தாள் படத்தை இயக்கினேன்’ என சொல்லியிருக்கிறார்.,
