சிவக்குமார் சொன்ன அந்த ரெண்டும் அப்படியே பலித்ததே... ரஜினிகாந்த் ஆச்சரியம்!
சிவக்குமாரோடு கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய 2 படங்கள்ல தான் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார். அவரோட நான் நடிச்சது 2 படங்கள் தான் என்றாலும் அந்தப் படத்துல நடிக்கும்போது நான் அவருக்கிட்ட இருந்து கத்துக்கிட்ட நல்ல விஷயங்களை ஒரு நாளும் என்னால மறக்க முடியாது என்கிறார் ரஜினிகாந்த்;. வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.
படங்களில் நடிக்கும்போது மது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் எனக்கு இருந்தன. சிவக்குமார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதெல்லாம் விட்டுரு. நிச்சயமா எதிர்காலத்துல நீ மிகப்பெரிய நடிகனா வருவ. அதனால உன் உடம்பைக் கெடுத்துக்காதன்னு தினமும் எங்கிட்ட சொல்வாரு. என்னடா இந்த மனுஷனோட ரொம்ப தொல்லையா போச்சுன்னு பலமுறை நான் சலிச்சிக்கிட்டு இருக்கேன். என் மேல இருந்த அக்கறையில தான் அவரு அப்படி சொல்லிக்கிட்டு இருந்தார்.
அந்தளவுக்கு என் மேல அன்பு, பாசம், மரியாதை எல்லாம் வச்சிருந்தார். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். ஒழுக்கமானவர். நேர்மையானவர். ஆண்டவனால ஆசிர்வதிக்கப்பட்டவர். இதுபோன்ற மனிதர்கள் சொல்றது எல்லாம் பலிக்காமல் இருக்குமா? நீ பெரிய நடிகனா வருவன்னு அவரு சொன்னது அப்படியே பலித்தது. அது மாதிரி இன்னொன்னு சொன்னாரு. இதுபோன்ற தீய பழக்கங்களால உன்னோட உடம்பு கெடும்னு. அதுவும் பலித்தது.
என்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது என்றால் அதுக்குக் காரணம் அப்போது என்னிடம் இருந்த பழக்கங்கள்தான். இன்றைக்கும் நான் அவருடன் நடித்த படங்களை எல்லாம் பார்க்கும்போது அவர் சொன்னது என்னோட மனத்திரையில் அப்படியே ஓடும் என்று ஒரு பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார்.
