காமெடிப்படங்களில் கலக்கிய சிவாஜி... இயக்குனருக்குக் கொடுத்த பதிலடி!
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. அது ஒரு முழுநீள நகைச்சுவை படம். அப்படி ஒரு வாய்ப்பு எப்படி கிடைத்தது? அதில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள் என ஒரு நிருபர் சிவாஜியைக் கேட்டார். அந்தப் படத்தை பிஆர்.பந்துலு தயாரித்தார். ப.நீலகண்டன் டைரக்டர். மராத்தி மொழியி கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஆபாசம் இல்லாம ஒரு நகைச்சுவை படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையில அந்தப் படத்தை எடுத்தாங்க.
அந்தப் படத்தின் இயக்குனரான ப.நீலகண்டனை எனக்கு சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். பராசக்தி படத்தில் நான் நடிக்க சென்றபோது அவர் அங்கு இருந்தார். இவங்களை எல்லாம் ஏன் உள்ளே விடுறீங்கன்னு என்னைப் பார்த்துக் கேட்டவர். அப்படிப்பட்ட அவர் எங்கிட்ட வந்து நீங்க என் படத்துல நடிக்கணும்னு கேட்டா அது யாருக்கு வெற்றி? அதனால தான் அந்தப் படத்துல நான் நடிச்சேன்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மாச்சாரி படத்தைப் பொருத்தவரைக்கும் அதோட சிறப்பு என்னன்னா நீங்க படத்தை பார்த்து ரசிக்கிற மாதிரியே அந்தப் படத்தோட வசனத்தை மட்டும் கேட்டாலும் ரசிக்க முடியும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி மாதிரி நான் நடித்த இன்னொரு நகைச்சுவை படம் சபாஷ் மீனா. அதுல நானும் சந்திரபாபுவும் இணைந்து நடித்தோம் என்ற பத்திரிகை நிருபர் ஒருவருக்குப் பதில் சொல்லி இருக்கிறார் சிவாஜி.
