ஒரே வேட்டி, சட்டை.. மரத்தடியில் படுக்க வைத்த பாரதிராஜா... முதல் மரியாதையை அசைபோட்ட சிவாஜி!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் திரைவாழ்க்கையிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய திரை வாழ்க்கையிலும் முதல் மரியாதை முக்கியமான திரைப்படம். அந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி தன் வாழ்க்கை வரலாற்று நூலில் சிவாஜிகணேசன் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
பாரதிராஜா சின்ன பிள்ளையில இருந்து எனக்குத் தெரிந்தவர். எனக்கு வேண்டியவரும் கூட. அவருடைய படத்தில நான் நடிக்கணும்னு கேட்டுக்கிட்டார். அப்போ எனக்கு உடல் நலம் சரியில்லை. ஆனாலும் அவருடைய வேண்டுகோளை ஏற்று நான் அந்தப் படத்தில நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். சூட்டிங்கிற்காக ஒரு மாசம் மைசூர் சென்று இருந்தேன்.
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் காவிரி கரையில ஒரு மரத்தடியில என்னை உட்கார வச்சார். காலுக்கு செருப்பு கூட இல்லாம ஒரே ஒரு வேட்டி சட்டை கொடுத்து அங்கேயே என்னைப் படுக்க வைத்து இருந்தார் பாரதிராஜா. கிராமிய சூழலில் எடுக்கப்பட்ட அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
முதல் மரியாதைக்கு அப்புறமும் பாரதிராஜா டைரக்ஷன்ல நான் ஒரு படம் நடிச்சேன். அந்தப் படத்தினுடைய பெயர் பசும்பொன். அதுல நான், சிவக்குமார், ராதிகா எல்லாரும் நடிச்சோம். பாரதிராஜாவோடு பணியாற்றியது மறக்க முடியாத ஒரு அனுபவம் என்று பதிவு செய்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி.
