பாடலைப் படித்த எஸ்பிபி கேட்ட அந்தக் கேள்வி... வைரமுத்துவின் பளிச் பதில்!
வயதுக்கும், கவிதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டால் இல்ல அப்படிங்கறதுதான் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் மீது வைத்த குற்றச்சாட்டு என்று அவரிடம் இருந்து பதில் வருகிறது. அப்படி ஒரு கருத்தை வைரமுத்துவின் மீது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பதிவு செய்வதற்கு காரணமாக இருந்தது
இரண்டாம் உலகம் படத்துக்காக வைரமுத்து எழுதிய ஒரு பாடல். பாடல் பிரிவுக்கு எஸ்பி.பாலசுப்பிரமணியம் வந்த உடனே, அவருக்கு வைரமுத்து பாடலைச் சொல்லச் சொல்ல எஸ்பி.பாலசுப்பிரமணியம் எழுதிக் கொள்வதுதான் எப்போதும் வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான். வரிகளை வைரமுத்து சொல்லச் சொல்ல, எஸ்பி.பாலசுப்பிரமணியம் எழுதிக்கொண்டே வந்தார்.
கண்டார் மயங்கும் வண்டார் மலரே. நின்றோர் மொழி சொல்லடி. உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி என்ற வரிகளை வைரமுத்து சொன்னபோது, எழுதுவதை நிறுத்தி விட்டு வயதுக்கு மீறி சிந்திக்கிறீர்கள் என்று வைரமுத்துவைப் பார்த்து எஸ்பி.பாலசுப்பிரமணியம் சொன்னார்.
எழுத்தாவது இளமையாக இருக்கட்டுமே என்று அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறார் வைரமுத்து. படைப்பாளன் முதிர முதிர, படைப்பு இளமையாவது கலையின் ரசவாதம் என்பதுதான் வைரமுத்துவின் கருத்து.