Cinema News
“நான் அந்த படத்துல நடிச்சிட்டு வரேன்”… படக்குழுவினரிடம் அடம் பிடித்த வடிவேலு… கோபத்தில் இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு…
தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயலாக திகழ்ந்து வரும் வடிவேலு, தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பி.வாசு இயக்கி வரும் “சந்திரமுகி 2” திரைப்படத்திலும் வடிவேலு நடித்து வருகிறார்.
வடிவேலுவுக்கு ரெட் கார்டு
கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”. இத்திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கியிருந்தார். இயக்குனர் ஷங்கர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு சரியான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தராத காரணத்தினால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு
இந்த விவகாரம் சுமூகமாக பேசிமுடிக்கப்பட்ட பின் கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு சினிமாவில் நடிப்பதற்கான தடை நீங்கியது. தடை நீங்கிய பின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் வடிவேலு.
ஷூட்டிங்கில் அடம்பிடித்த வடிவேலு
வடிவேலு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். எனினும் வடிவேலு தான் ஹீரோவாக நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் இறுதியாக ஒரு புதிய பாடல் ஒன்றை சேர்க்க வேண்டும் என விரும்பினாராம். அதனை தொடர்ந்து அப்பாடல் காட்சியை படமாக்க படக்குழு தயாராக இருந்தது.
இந்த சமயத்தில் “சந்திரமுகி 2” படப்பிடிப்பில் ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாராம் வடிவேலு. அப்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டு வருவதாக கூறினாராம். அதற்கு “சந்திரமுகி 2” இயக்குனர் பி.வாசு “இன்னும் இரண்டு நாட்களில் இந்த காட்சியை எடுத்து முடித்துவிடலாம். அதன் பிறகு செல்லுங்கள்” என கூறினாராம். ஆனால் இயக்குனரின் பேச்சை வடிவேலு கேட்கவில்லை.
இதையும் படிங்க: கோமாளி இயக்குனருக்கு இரண்டு முறை ‘நோ’ சொன்ன எஸ்.ஜே.சூர்யா… என்னவா இருக்கும்??
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தையும் “சந்திரமுகி 2” திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் லைக்கா நிறுவனம், வடிவேலுவிடம் “சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் காட்சியை முடித்துவிட்டு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடல் காட்சியை எடுக்கலாம்” என கூறிப்பார்த்தார்களாம். ஆனால் வடிவேலு, தான் ஹீரோவாக நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் பாடல் காட்சியை முதலில் முடித்துவிட்டுத்தான் இதில் நடிப்பேன் என ஒற்றை காலில் நின்றாராம்.
இதனால் கோபமடைந்த பி.வாசு “நீங்கள் இப்போது இந்த காட்சியில் நடிக்காமல் போனால், இந்த காட்சியையே நான் படத்தில் இருந்து தூக்கிவிடுவேன்” என கூறினாராம். அதற்கு வடிவேலு “பரவாயில்லை. தூக்கி விடுங்கள்” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம். இதனால் மேலும் கோபமான பி.வாசு அந்த காட்சியை தூக்கிவிட்டாராம்.