Cinema History
ரஜினியின் ஒரே படத்திற்கு ரெண்டு கிளைமாக்ஸ்கள்…எது ஜெயித்தது மெலடியா…ஆக்ஷனா…?
ரஜினி தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். அவருடைய புகழின் உச்சியில் மேலும் ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு போட்டது இந்தப்படம். அது தான் நல்லவனுக்கு நல்லவன்.
நெகடிவ் ரோலில் கார்த்திக்
நவரச நாயகன் கார்த்திக்கும் உடன் சேர்ந்து நடித்திருப்பது படத்திற்குக் கூடுதல் சிறப்பு. இந்தப்படத்தில் இவர் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.
1984ல் வெளியானது நல்லவனுக்கு நல்லவன். எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். ரஜினி, ராதிகா, கார்த்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. இந்தப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் விசு.
இந்தப்படத்திற்கு ரெண்டு கிளைமாக்ஸ்கள் எடுக்கப்பட்டன. அது எப்படின்னு தெரியுமா?
தர்மாத்மூடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் நல்லவனுக்கு நல்லவன். இந்தப்படம் தெலுங்கில் ஓடவில்லை என்பதால் நாம ஏன் எடுக்கணும்னு இயக்குனர் பஞ்சு அருணாசலம் கேட்டார்.
அதற்கு ஏவிஎம் தயாரிப்பாளர் எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு மட்டும் இந்தப்படத்தில் வெற்றிக்கான ஏதோ ஒரு விஷயம் இருப்பதாகவே பட்டது. விசுவை அழைத்துப் படத்தைப் போட்டுக் காட்டினார் சரவணன்.
ரொம்ப நல்லா பண்ணலாம். கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் செய்தால் போதும் என்றார்.
கவிதை கிளைமாக்ஸ்
படம் முடிந்ததும் கிளைமாக்ஸ் காட்சி ரொம்ப மென்மையாக இருந்தது. அது ஒரு கவிதை போல இருந்தது. படமோ முதலில் மசாலா மாதிரி இருக்கு. அதுக்கு இந்த கவிதைத்தனமான கிளைமாக்ஸ் சரிப்பட்டு வராதுன்னு சொன்னார்.
ஆனால் ரஜினிக்கம், எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்த கிளைமாக்ஸ் தான் பிடிச்சிருந்தது.
தயாரிப்பாளரின் பிடிவாதம்
ஆனால் தயாரிப்பாளர் சரவணனுக்கு ஆக்ஷன் கிளைமாக்ஸ் தான் ஒர்க் அவுட் ஆகும் என்று தோன்றியது. அதனால் அதை எடுப்பதிலேயே குறியாக இருந்தார்.
மென்மையான படத்துக்குத் தான் மென்மையான கிளைமாக்ஸ் வேணும். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் படம் என்றால் இப்படி இருக்கலாம். இந்தப்படத்திற்கு ஆக்ஷன் தான் எடுபடும் என்றார்.
படமும் சென்சார் ஆகிவிட்டது. ஆனால் கிளைமாக்ஸ் மீண்டும் எடுக்கப்பட்டது. அதைத் திரும்பவும் சென்சாருக்கு அனுப்பி சான்றிதழை வாங்கினர்.
அதன்பிறகு படத்தைப் பார்த்த ரஜினியும், எஸ்.பி.முத்துராமனும் அதுவே சூப்பர் என்றனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
டபுளான விசுவின் சம்பளம்
இந்தப்படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் கதை வசனம் எழுதிய விசுவிற்கு முதலில் குறைவாகத் தான் சம்பளம் பேசப்பட்டதாம். படத்திற்கு ஆக்ஷன் கிளைமாக்ஸ் எடுத்ததும் இரண்டாவதாக சென்சார் ஆகி சர்டிபிகேட் வெளியானதும் அவருக்குப் பேசப்பட்ட தொகையைப் போல 2 மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் அதிருப்தியில் இருந்த விசுவிற்கு 2 மடங்கு தொகை கொடுத்ததும் திக்குமுக்காடிப் போனார்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிட்டுக்குச் செல்ல சிட்டுக்கு, உன்னைத் தானே தஞ்சம், வச்சுக்கவா, முத்தாடுதே, நம்ம முதலாளி ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
துளசி, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், விசு உள்பட பலரும் நடித்துள்ளனர்.
ரஜினியை வைத்து ஏவிஎம் தயாரிப்பில் வெளியான படங்களில் மிகவும் பிடித்தது நல்லவனுக்கு நல்லவன் தான் என்கிறார் தயாரிப்பாளர் எம்.சரவணன்.