More
Categories: Cinema News latest news

வெற்றிமாறன் இயக்கும் வரலாற்று திரைப்படம்… தயாரிக்கும் சீமான்… ஒர்க் அவுட் ஆகுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் ஒரு விழாவில் “ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுகிறார்கள்” என கூறிய வார்த்தை பெரும் சர்ச்சையானதை நாம் அனைவரும் அறிவோம்.

வெற்றிமாறனின் இந்த கருத்து குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இது ஒரு பக்கம் இருக்க, வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துவருபவர்களும் இருக்கிறார்கள். “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற ஒன்றே கிடையாது. சைவம், வைணவம் என்ற மதங்கள்தான் இருந்தது. இதனை குறிப்பிட்டுத்தான் அவர் அப்படி கூறினார்” என பலரும் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார். கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அதாவது “ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவதெல்லாம் ஒரு வேடிக்கை. வள்ளுவருக்கு காவி பூசுவது போன்ற விஷயம்தான் இது” என கூறியுள்ளார். சீமான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அதிரடியான டிவிட் ஒன்றையும் பகிர்ந்தார்.

 அதில் “அருண்மொழி சோழனின் உண்மையான வரலாற்றை நான் தயாரிக்க இருக்கிறேன். அத்திரைப்படத்தை என அன்பு தம்பி வெற்றிமாறன் இயக்குவார்” என கூறியிருந்தார்.

ஆனால் வெற்றிமாறனோ “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பை கூட இன்னும் முடிக்கவில்லை. மேலும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வேறு வெளிவருகிறது. “விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தையும் இயக்க உள்ளார் வெற்றிமாறன்.

மேலும் வெற்றிமாறன் எப்போதும் கம்மியான பொருட்செலவிலேயே திரைப்படம் எடுப்பார். ஆனால் வரலாற்றுத் திரைப்படம் என்று வரும்போது அதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுகிறது. அந்தளவு பட்ஜெட்டை சீமான் கொடுப்பாரா? அத்திரைப்படத்தை இயக்க வெற்றிமாறன் ஒப்புக்கொள்வாரா? என்பதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை என்று இணையத்தில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

எனினும் வெற்றிமாறன் அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை இயக்கினால், மிகவும் நேர்த்தியாக அமையும் எனவும் பலர் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Arun Prasad

Recent Posts