
தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார். அதன்பின் விசாரணை, ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள். தற்போது சிம்புவை வைத்து அரசன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில்தான், சமீபத்தில் கொடுக்கப்பட்ட தமிழக அரசு விருதை வெற்றிமாறன் வாங்க மறுத்தது தெரிய வந்திருக்கிறது..
இதுபற்றி ஊடகத்தில் பேசிய வலைப்பைச்சு அந்தணன் ‘தமிழக அரசின் சிறந்த வசன எழுத்தாளர் விருது அசுரன் படத்திற்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அந்த படத்தில் தன்னுடைய இணைந்து பணியாற்றிய எழுத்தாளர் சுகாவுக்கும் சேர்த்து விருது வழங்க வேண்டும் என வெற்றிமாறன் கேட்டிருக்கிறார்.
ஆனால் விதிமுறைப்படி ஒருவருக்கு மட்டுமே விருது கொடுக்கப்படும் என சொன்னதால் ‘எனக்கு விருதே வேண்டாம்’ என சொல்லி மறுத்துவிட்டார். விருதை வீட்டிற்கு அனுப்பி விடுகிறோம் என சொல்லியும் அதை கறாராக வெற்றிமாறன் மறுத்துவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்..