இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான LIK திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது அவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் லீக் விவகாரம் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் இதுவரை 100 கோடி வசூலைத் தாண்டிய நிலையில், “எல்.ஐ.கே” திரைப்படம் வெளியான ஆறு நாட்களாகியும் சுமார் 44 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
இப்படத்தை ப்ரோமோட் செய்வதற்காக விக்னேஷ் சிவன் தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்போது, “ஜனநாயகன்” திரைப்படத்தின் லீக் சர்ச்சை குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது: சினிமாவை நான் ஒரு கடவுளாகவே பார்க்கிறேன். என் படத்தின் எடிட்டர் கூட ஏதாவது காட்சிகளை அனுப்ப வேண்டுமானால், பாதுகாப்புடன் (பாஸ்வர்ட் வைத்து) தான் அனுப்புவார். அதனால், எடிட்டர்கள் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதில் யாரோ திட்டமிட்டு செய்கிறார்கள் போல தெரிகிறது என்றார். மேலும், சிலர் விஜய் தான் லீக் செய்தார் என்று அரசியல் பண்றது எல்லாம் சுத்தமாக சரியில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த லீக் விவகாரம் எந்த விதத்திலும் அந்தப் படம், தயாரிப்பாளர் அல்லது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் இதை புரிந்து கொண்டு, படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு சென்று பார்த்து ஆதரிப்பதே நடிகர் விஜய்க்கு நாம் செலுத்தும் மரியாதை எனவும் கூறினார்.
இறுதியாக, “ஒரு ஹீரோவாக விஜய் அவர்களை நாம் திரையில் கடைசியாக பார்க்கும் தருணமாக ‘ஜனநாயகன்’ இருக்கலாம். அதற்குள் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தாண்டி ரசிகர்கள் திரையரங்கில் சென்று படம் பார்த்து கொண்டாட வேண்டும்” என்று விக்னேஷ் சிவன் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.





