விஜயகாந்த் ராவுத்தர் நடத்திய ஹோட்டல்.. அந்த ஹோட்டலின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

viji
Vijayakanth: மற்றவர்களை சாப்பிடச் சொல்லி அதை அழகு பார்ப்பது என்பது எல்லோராலும் முடியாத விஷயம். அவரவர் வேலையை பார்க்கும் இந்த உலகத்தில் மற்றவர்களின் நலனுக்காகவும் அவர்களின் வயிறு நிறைய வேண்டும் என்பதற்காகவும் வாழ்ந்து மறைந்தவரில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் விஜயகாந்த். விஜயகாந்த் என்று சொன்னாலே வயிறார சாப்பாடு போட்டு நம் மனசை குளிர வைப்பவர் என்றுதான் பல பேர் சொல்லி இருக்கிறார்கள்.
அவருடைய அலுவலகத்திலும் சரி அவருடைய வீட்டிற்கு சென்றாலும் சரி யாரு எந்த நேரத்தில் போனாலும் சாப்பிட வைக்காமல் அவர் அனுப்பவே மாட்டார். அதைப்போல படப்பிடிப்பு தளத்தில் தனக்கு என்ன சாப்பாடு கொடுக்கப்படுகிறதோ அதைத்தான் ஒட்டுமொத்த பட குழுவுக்கும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு முறையை கொண்டு வந்தார். கறி விருந்து என்றால் டெக்னீசியன்களுக்கும் கறி விருந்து தான் கொடுக்க சொல்வார்.
முதன்முதலில் இலை போட்டு ஒட்டுமொத்த பட குழுவுக்கும் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த் தான். இந்த நிலையில் ஊமை விழிகள் பட இயக்குனர் அரவிந்த்ராஜ் விஜய்காந்தை பற்றி கூறும் போது ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்தார். விஜயகாந்த் அவருடைய நண்பர் ராவுத்தரும் இணைந்து நியூ மதுரை இன்டர்நேஷனல் என்ற ஒரு ஹோட்டலை நடத்தி வந்தார்களாம்.

ராஜா பாதர் தெருவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அங்கிருந்துதான் சாப்பாடு வருமாம். அந்த ஹோட்டலில் வழக்கமாக சாப்பிட வருபவர்கள் ஏராளமான பேர். தினசரி 250 சாம்பார் சாதம் 250 தயிர் சாதம் அந்த தெரு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாம். அதுவும் சாப்பாடு வந்து இறங்கியதும் விஜயகாந்த் வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவரும் ஒரு உருண்டை எடுத்து சாப்பிட்டு விட்டு தான் அதை மற்றவர்களுக்கு பரிமாற சொல்லுவாராம்.
இன்னொரு விஷயம் என்னவெனில் இவரை பார்க்க ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விஜயகாந்த் அலுவலகத்திற்கு மதியம்போல் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் தன்னுடைய உதவியாளரை பார்த்து பசியோட வந்திருக்கிறான் போல. சாப்பாடு இருக்கிறதா என கேட்டாராம். அந்த உதவியாளரும் இருக்கிறது என சொல்ல இந்த சுரண்டி சுரண்டி சாப்பாடு கொடுப்பதெல்லாம் இருக்கக்கூடாது.
வயிறார அவன் சாப்பிட்டு விட்டு போக வேண்டும். அப்படி இல்லை என்றால் சொல்லு, நான் அவனுடன் ஒரு ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ வெளியில் ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வா .அதன் பிறகு அவனை சாப்பிட வைத்து அனுப்பு என சொன்னாராம் விஜயகாந்த். இப்படி எத்தனை பேர் சொல்வார்கள் என தெரியவில்லை. சாப்பாடு இல்லை என்றாலும் தன்னை நாடி வந்த யாரும் சாப்பிடாமல் போகக்கூடாது என்று எண்ணம் படைத்த ஒரு மகா கலைஞன் விஜயகாந்த் என அந்த இயக்குனர் ஒரு பேட்டியில் கூறினார்.