More
Categories: Cinema History Cinema News latest news

ரியல் லைஃபிலும் விஜயகாந்த் ஹீரோதான்… பூந்தோட்ட காவல்காரன் உருவான பின்னணி!

அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் பூந்தோட்ட காவல்காரன். பல்வேறு தடைகள் கடந்து படம் எப்படி உருவானது தெரியுமா… ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட பெரிய சிக்கலை விஜயகாந்த் எப்படி கையாண்டார்.

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த் முன்னணி நடிகராக உருவாக முக்கியமான காரணமாக இருந்தவர். அவர் இயக்கத்தில் விஜயகாந்த் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் இயக்குநரான செந்தில்நாதன். ஆரம்பகாலம் முதலே விஜயகாந்துடன் நல்ல நட்பில் இருந்து வந்தார். குறிப்பாக, விஜயகாந்த் நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் கோர்ட் சீனில் டயலாக்குகளை பேச விஜயகாந்த் சிரமப்பட்டிருக்கிறார். ஹீரோவை மாற்றிவிடலாம் என்று பேச்சு எழவே, ஒரு நாள் கேப் விட்டு அடுத்த நாள் டயலாக்குகளை அசத்தலாகப் பேசி மிரட்டியிருக்கிறார். அதேபோல், செந்தில் நாதனை வைத்துப் படமெடுத்தால் நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளர்கள் பலரிடமும் சிபாரிசு செய்திருக்கிறார்.

Advertising
Advertising

இதுபற்றி, தயாரிப்பாளர் ஒருவர் செந்தில்நாதனிடம் சொல்லவே, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அப்போது, ஏவிஎம் ஸ்டூடியோவில் டப்பிங்கில் இருந்த விஜயகாந்திடம் அவர்கள் நேரடியாகவே சென்று கேட்க, நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் விஜயகாந்த். அப்படி தொடங்கியதுதான் பூந்தோட்ட காவல்காரன் படம். படத்தின் டிஸ்கஷனுக்காக பாம்குரோவ் ஹோட்டலில் ரூம் போட்டு, இயக்குநர் செந்தில்நாதன் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். அப்போது, ஒரு மேனேஜர் என்பதையும் தாண்டி அவருடனேயே இருந்து எல்லா உதவிகளையும் செய்தது அம்மா கிரியேஷன்ஸ் சிவா. இப்படியாக திரைக்கதை உருவாகிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவு 11 மணியளவில் விஜயகாந்துக்குக் கண்ணில் அடிப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பதறிப்போன செந்தில்நாதன், அவரைப் பார்க்கப் போயிருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்துதான் விஜயகாந்தைப் பார்க்க முடிந்திருக்கிறது.

படம் தொடங்கிய நிலையில் இப்படி நடந்துவிட்டதே என பேச்சு எழுந்ததால், பாம்குரோவ் ரூமைக் காலி செய்திருந்தார்கள். இதைக்கேள்விப்பட்ட விஜயகாந்த் ரொம்பவே கோபப்பட்டாராம். எனக்கு அடிபட்டதற்கும் செந்தில் படத்துக்கும் என்ன சம்மந்தம்? உடனடியாக ரூமைப் போட்டு வேலையை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, 1988ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து படம் ரெடியானதும் படத்தைப் பார்த்த சிலர், நன்றாக வரவில்லை. இப்படி ஒரு இயக்குநருக்கு ஏன் விஜயகாந்த் வாய்ப்புக் கொடுத்தார் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், படம் மீது நம்பிக்கை வைத்த விஜயகாந்த், முதலில் ரீரெக்கார்டிங் அனுப்புங்கள். என்ன ஆனாலும் படத்தை நானே ரிலீஸ் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். படம் ரிலீஸாகி விஜயகாந்துக்கும் இயக்குநருக்கும் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

ஷூட்டிங்கின்போது, பல்வேறு பிரச்னைகளை படக்குழு சந்தித்திருக்கிறது. ஒரு சூழ்நிலையில் படக்குழுவைத் தாக்க ஒரு தரப்பினர் கூடியிருக்கிறார்கள். உடனடியாகக் களத்தில் இறங்கிய விஜயகாந்த், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எதிர்த்து நின்றிருக்கிறார். அத்தோடு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். அதேபோல், ஷூட்டிங்கின்போது லைட் மேன் தொடங்கி எல்லா தொழிலாளர்களும் வயிராற சாப்பிட வேண்டும் என்று அக்கறையாகப் பார்த்துக் கொள்வாராம் விஜயகாந்த். எல்லாரும் நல்லா சாப்பிட்டார்களா என்று நேரடியாகவே வந்து அவ்வப்போது பார்ப்பாராம். இலையில் மிச்சம் வைக்குமளவுக்கு நன்றாக சாப்பாடு போட வேண்டும் என்று நினைப்பாராம். அதேபோல், தினமும் லாரியில் இளநீர் லோடு வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இறக்கப்படுமாம். பெரிய அண்டாவில்தான் இளநீரைப் பிடித்து வைப்பார்களாம். அந்த அளவுக்கு எல்லா தொழிலாளர்களின் வயிறும் மனதும் நிறைய வேண்டும் என்று மெனக்கெட்டவர் விஜயகாந்த்.

Published by
Manikandan

Recent Posts