கதையே கேட்கல!. நன்றி மறக்காமல் நடித்து கொடுத்தார் அஜித்!.. இயக்குனர் உருக்கம்!..

ajith
திரையுலகை பொறுத்தவரை நன்றியுணர்ச்சியோடு இருப்பவர்கள் மிகவும் அரிது என்றே சொல்லலாம். ஏனெனில், நல்லவர்களை கூட சினிமா உலகம் கெட்டவராகவும், சுயநலவாதியாகவும் மாற்றிவிடும். சினிமாவில் போட்டி, பொறாமைகள் மிகவும் அதிகம். யாரும் யாரையும் அவ்வளவு சுலபத்தில் தூக்கிவிடமாட்டார்கள்.
ஆனால், அஜித் இதில் மாறுபட்டவர். தான் கஷ்டப்பட்டு வந்ததால் கஷ்டப்பட்ட பலரையும் தூக்கிவிட்டிருக்கிறார். பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பல அறிமுக இயக்குனர்களுக்கு அவர்களின் முதல் பட ஹீரோவாக அஜித் இருந்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவை வாலி படம் மூலம் இயக்குனராக்கியது அஜித்தான். இப்போது குட் பேட் அக்லி படம் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபலமாகியுள்ளார்.
பொதுவாக திரையுலகம் என்பது குதிரை ரேஸ் போலத்தான். ஓடும் குதிரையில் மட்டுமே எல்லோரும் பணம் கட்டுவார்கள். தொடர்ந்து ஹிட் படம் கொடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பின்னால் மட்டுமே தயாரிப்பாளர்கள் ஓடுவார்கள். தோல்விப்படம் கொடுத்த நடிகர்களை இயக்குனர்கள் சீண்ட மாட்டார்கள். அதேபோல், தோல்விப்படம் கொடுத்த இயக்குனர்களை நடிகர்கள் சீண்ட மாட்டார்கள். ஆனால், அஜித் இதில் விதிவிலக்கு.

இந்நிலையில்தான் இயக்குனர் விக்ரமன் ஒரு முக்கிய தகவலை ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார். நான் புதிய மன்னர்கள் படம் இயக்கிய போது அஜித்தை நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர் முதுகில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனவே ‘இப்போது என்னால் நடிக்க முடியாது சார்’ என சொல்லிவிட்டார்.
அதன்பின் காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து அஜித் பிரபலமாகிவிட்டார். அப்போதுநான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தேன். அதில், அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என தயாரிப்பாளர் நினைத்தார். ஆனால், அவர் இப்போது ஹீரோவாக நடிப்பதால் சம்மதிப்பாரா என்கிற சந்தேகம் வந்தது.
ஆனால், இயக்குனர் நான் என்றதும் அஜித்தே அலுவலகத்திற்கு வந்தார். நான் கதை சொல்கிறேன் என சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘நான் வாய்ப்பே இல்லாமல் இருந்தபோது என்னை நீங்கள் தேடி வந்தீர்கள். இந்த படத்தில் நீங்கள் என்ன வேடம் கொடுத்தாலும் நான் நடிக்கிறேன்’ என சொல்லி நடித்து கொடுத்தார். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன்’ என பேசியிருக்கிறார் விக்ரமன்.