கட்டபொம்மனுடன் மோதி அடிவாங்கிய கண்ணதாசன்.. சோதனையில் புலம்பி தள்ளிய கவியரசு…

Published on: September 20, 2022
---Advertisement---

கவியரசு கண்ணதாசன் தமிழில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் சுவை சொட்ட சொட்ட அவர் எழுதிய பாடல்கள் காலத்திற்கும் பாடப்படுபவை. தத்துவம், காதல், சென்ட்டிமென்ட், வறுமை என அவர் தொடாத விஷயங்களே கிடையாது. அந்த அளவுக்கு கவித்தன்மையும் தமிழ் வல்லமையும் கொண்டவர்.

இவ்வாறு கவியரசராக வலம் வந்த கண்ணதாசனுக்கு சொந்த படம் தயாரிக்க வேண்டும் என ஆசை வந்தது. அதன் படி 1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தை கண்ணதாசன் தயாரித்தார். இதில் டி ஆர் மகாலிங்கம், பண்டரி பாய், மனோரமா, காகா ராதாகிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கவிஞராக வெற்றி வாகை சூடிய கண்ணதாசன் ஒரு தயாரிப்பாளராகவும் தனது முதல் படத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் அதன் பிறகு தான் வினையே ஆரம்பித்தது. அதாவது 1959 ஆம் ஆண்டு “சிவகங்கை சீமை” என்ற திரைப்படத்தை கண்ணதாசன் தயாரித்தார். சுதந்திர போராட்ட வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன், வரலட்சுமி, எம் என் ராஜம் என பலரும் நடித்திருந்தனர். சிவாஜி கணேசனின் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்திற்கு போட்டியாக தனது திரைப்படத்தையும் வெளியிட முடிவு செய்தார் கண்ணதாசன்.

அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் “சிவகங்கை சீமை” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிடலாம் என கண்ணதாசனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் கண்ணதாசன் அவர்களின் அறிவுரையை பொருட்படுத்தவில்லை.

அதன் விளைவு என்ன ஆனது தெரியுமா? கண்ணதாசன் பெரும் நஷ்டத்தை கண்டார். கிட்டதட்ட ரூ. 90,000 நஷ்டம் ஏற்பட்டதாக கண்ணதாசன் தனது சுயசரிதையில் தெரிவித்திருக்கிறார்.

“வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் தமிழின் முதல் கலர் திரைப்படம். ஆனால் “சிவகங்கை சீமை” கருப்பு வெள்ளை திரைப்படம். மேலும் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படங்களில் வசனங்கள் எல்லாம் நச் என்று இருக்கும்.  இந்த விஷயங்கள் தான் “சிவகங்கை சீமை” ஓடாததற்கு காரணங்களாக இருந்துருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு திரைப்படங்களுமே சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். ஆனால் நெருக்கமானவர்களின் அறிவுரையை கேட்காததால் கண்ணதாசன் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு அடிவாங்கி இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.