Maruthanayagam
Maruthanayagam

தமிழ்த்திரை உலகில் ரொம்பவே யதார்த்தமா நடித்து வருபவர் ரவி வெங்கட்ராமன். இந்தியன் 2 படத்தில் இவர் நடித்ததுக்குப் பிறகு நிறைய படங்கள் புக் ஆகியிருக்கிறதாம். இயக்குனர் ஷங்கர் சார் எனக்கு நடிச்சே காட்டிட்டாரு. சூட்டிங் ஸ்பாட்ல அவுட்புட் என்ன வரணுமோ அதை அப்படியே கொண்டு வரணும்னு மெனக்கிடுவார்.

சமுத்திரக்கனி சார் கூட நடிக்கிறேன். நாடோடிகள்ல எல்லாம் எனக்கு பேரு வந்தது. அன்னைக்கு போட்ட போலீஸ் டிரஸ்ஸ தான் போட்டுக்கிட்டு இருக்குறேன். ரெண்டு பேரும் எனக்குப் பிடித்த இயக்குனர்கள். இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட் ஜாலியா இருந்தது. ஷங்கரோட அசோசியேட் டைரக்டர்ஸ்சும் அவரே மாதிரியே திறமையா பேசுறவங்க தான் என்கிறார் ரவி.

Actor Ravi venkatraman
Actor Ravi venkatraman

ஹேராம், மருதநாயகம் படங்களுக்கு புரொடக்ஷன் சார்பாக வேலை செய்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்டபோது இப்படி சொல்கிறார். கமல் சார் நல்ல புரொடியூசர். அவர் எப்பவுமே கரிஷ்மாவ யூஸ் பண்ண மாட்டார். ராஜ்கமல் ஆபீஸ்ல இருந்து சென்னைல உள்ள ஒரு லைப்ரரில சூட்டிங் எடுக்க அனுமதி கேட்கப் போனேன். கமல் சாருக்குத் தானே ப்ரீயாவே கொடுக்குறோம்னு சொன்னாங்க. ஆனா கமல் சார் அதெல்லாம் வேணாம். சூட்டிங் முடிஞ்சதும் ஒரு தொகையை கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டாரு.

மருதநாயகம் கதையைப் படிச்சுப் பார்த்து மிரண்டுட்டேன். முதல்ல படிச்ச ஸ்கிரிப்ட்டும் அதுதான். ஜெயப்பூர்ல 5 நாள் சூட்டிங். அப்புறம் காரைக்குடி, சாலக்குடி காட்டு அருவி எல்லாம் சூட்டிங் நடந்தது. குதிரைப்படைக்கு அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம். ஆர்ட் டைரக்டர் சாபுசரில், ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பண்ணினாங்க. ஜூனியர் ஆர்டிஸ்டே 1000 பேரு இருந்துருப்பாங்க. இவ்ளோ பேரை கையாளறதே கஷ்டம். அவரே டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர், அவரே ரைட்டர்.

இந்த நாலு வேலையையும் ஒண்ணா பண்றாரு. அஷ்டாவதானி மாதிரி. எருமை மாட்டுல ஏறி வந்தது கூட ரொம்ப பயிற்சி எடுத்துத் தான் பண்ணினாரு. காரைக்குடில அந்த சீன் எடுத்தோம். அந்த இடத்துல காளை மாடு மேல மண் மூட்டையை எல்லாம் வச்சி ஓட விட்டுப் பார்த்தாரு. ரொம்ப கஷ்டப்பட்டு தான் பண்ணினாரு. எங்களுக்குப் பார்க்கும்போது ஜம்ப் பண்ணி உட்கார்ந்து ஓட்டிட்டு வர்ற மாதிரி தான் இருந்தது.

அவரு ஒண்ணை நினைச்சிட்டாருன்னா அதை முடிக்காம விடமாட்டாரு. அந்தப் படம் வந்துருந்துதுன்னா உலகளவில் அதுதான் சிறந்த படமா இருந்துருக்கும். ஏன்னா நான் ஸ்கிரிப்ட் முழுக்க படிச்சிப் பார்த்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.