வாலியின் புகழுக்கு ஒரு விதத்தில் நாகேஷும் ஒரு காரணம் தான்.. சொன்ன ஐடியா அப்படி

தமிழ் சினிமாவில் வாலிபக்கவிஞர் என கடைசி வரை போற்றப்பட்டவர் கவிஞர் வாலி. அந்தக் காலத்தில் எம்ஜிஆர் தொடங்கி இன்றைய காலகட்ட சிம்பு வரை அனைத்து தலைமுறை நடிகர்களுக்கும் பாடல்களை எழுதியவர். வார்த்தையில் பலவித ஜாலங்களை புகுத்தி பாடல்களை எழுதுவதில் தலைசிறந்த கவிஞராக விளங்கினார் வாலி. கவிஞர் கண்ணதாசன் ஒரு காலத்தில் உச்சம் தொட்ட கவிஞராக இருந்த போது அவருக்கு ஒரு நல்ல போட்டியாளராக சினிமாவில் நுழைந்தார் வாலி.

ரஜினி , கமல், விஜய், அஜித் இவர்களுக்கு இடையில் தொழில் முனையில் போட்டி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அதை போல் வாலியும் கண்ணதாசனும் தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வந்தார்கள். முதன்முறையாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த வாலி தன் நண்பர் நடித்த தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக சென்றார்.

அந்தப் படத்தில் கோபி என்பவர் நாயகனாக நடித்திருந்தார். அவர்தான் வாலியின் நண்பர். கோபி மேலும் அந்தப் படத்தில் நடித்த குண்டுராவ் என்ற நடிகரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரை பார்த்ததும் வாலி ‘இந்த உடம்பை வைத்து சினிமாவில் நடிக்க வந்ததே தப்பு’ என கூறியிருக்கிறார். அதற்கு குண்டுராவ் ‘ நீங்க கூட தான் பாடல் எழுத வந்திருக்கீங்க.. எந்த நம்பிக்கையில் வந்தீங்க’ என கேட்டிருக்கிறார்.

இப்படி ஆரம்பத்தில் மோதலில் வெடித்த இவர்களின் அறிமுகம் பின்னாளில் நெருங்கிய நண்பர்களாக மாற்றியது. அந்த குண்டுராவ் வேறு யாருமில்லை. நடிகர் நாகேஷ்தான், ஆரம்பத்தில் நாகேஷும் வாலியும் வறுமையின் உச்சத்தில் இருந்தார்கள். அப்போது நாகேஷ் வாய்ப்புகளுக்காக ஓடிக் கொண்டே இருப்பாராம். ஆனால் வாலி சோம்பேறியாகத்தான் இருப்பாராம்.

நாகேஷ் வாலியிடம் ஒரு பத்து பேப்பரை கையில் கொடுத்து ‘இப்படி சும்மாவே உட்காருவதற்கு பதிலாக உன் மனதில் தோன்றியதை அப்படியே எழுதினால் அது பின்னாளில் உனக்கு பயனுள்ளதாக மாறும் அல்லவா? படங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா’ என்ற ஆலோசனையை வழங்கினாராம்.

அப்படி வறுமையில் இருக்கும் போது எழுதிய பாடல்தான் ‘இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம்..இரவு பகல் எரிவதனால் எவர்க்கு என்ன லாபம்’ என்ற பாடல் வரிகள். அது பின்னாளில் சிவாஜி நடிப்பில் வெளியான ‘அன்புக்கரங்கள்’ என்ற படத்தில் இடம்பெற்றது. அதை போல ‘காசேதான் கடவுளடா..அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா’ என்ற பாடல் வரியையும் எழுத அந்தப் பாடல் சக்கரம் என்ற படத்தில் இடம்பெற்றது.

இப்படி நாகேஷ் சொன்ன அறிவுரையினால் வாலி எழுதிய பல பாடல்கள் பின்னாளில் அவருக்கும் பெரும் பணத்தை சம்பாதித்துக் கொடுத்தன என்பதுதான் உண்மை என இந்த தகவலை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *