Amaran:ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்து கடந்த வருடம் அக்டோபர் 31ம் தேதி  வெளியான திரைப்படம் அமரன்.
இப்படம் வெளியாகி இன்றோடு சரியாக ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்கிறது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளை வேட்டையாடும்போது மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் வந்த காதல் மற்றும் அவரின் ராணுவ அனுபவங்கள், அதிரடி ஆக்‌ஷன் சம்பவங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒரு அழகிய கதை மற்றும் திரைக்கதையை எழுதி இப்படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்திற்காக 4 வருடங்கள் உழைத்து, முகுந்தின் மனைவி இந்து ரெபாகா வர்கீஸ், முகுந்தின் பெற்றோர்கள், நண்பர்கள், அவருடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள், உயர் அதிகாரிகள் என பலரிடமும் பேசி ஒரு சிறப்பான திரைப்படமாக அமரனை உருவாக்கியிருந்தார்.

amaran

நிஜக்கதை என்பதாலேயே இப்படத்தின் கதையோடு ரசிகர்கள் ஒன்றி போனார்கள். அதோடு படத்தை ராஜ்குமார் எடுத்திருந்த விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. வழக்கமாக காமெடி கலந்த காதல் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சீரியஸ் சினிமாவாக அமரன் அமைந்தது. அவரும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து விலகி சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். அமரன் படம் சிவகார்த்திகேயனை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு காட்டியது.

முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபாகா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று சொல்வதே சரியாக இருக்கும். அவரின் கதாபாத்திரமும், அவரின் சிறப்பான நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த படத்திற்காக அவர் தேசிய விருது வாங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

amaran

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்று சிவகார்த்திகேயனின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்றிருப்பதால் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் one year of amaran என்கிற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *