நேற்று தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களை சந்தித்து தனது ஆறுதலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்க்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி விஜயை கடுமையாக விமர்சித்தனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என விஜய் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் கடுமையாக சாடி பேசி வந்தார்.

இதுதான் வாய்ப்பு என நினைத்து ஆளும் கட்சி தொண்டர்களும் எதிர்க்கட்சி தொண்டர்களும் இன்று வரை கரூர் சம்பவத்தை வைத்து விஜயை குற்றம் சாட்டி சோசியல் மீடியாக்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இதற்கிடையில் கரூர் சம்பவம் நடந்து 30 நாள்கள் ஆன நிலையில் நேற்று உயிரிழந்த அந்த 41 பேர் குடும்பங்களையும் சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதில் தனது சொந்தத்தை இழந்த ஒரு பெண் விஜயை சந்தித்த பின் உள்ளே என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறியுள்ளார், ஒவ்வொரு குடும்பமாக விஜய் சந்தித்திருக்கிறார். காலை 7.30 மணியிலிருந்து இந்த சந்திப்பு ஆரம்பமாகியிருக்கிறது. விஜய் பார்ப்பதற்கு ரொம்பவும் வாடியிருந்தாராம். அவர்களை பார்த்ததும் முதலில் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

அவர் சரியாக சாப்பிட்ட மாதிரியே இல்லை. அந்தளவுக்கு ஆளே நொடிஞ்சு போயிருந்தார். உடல் மெலிந்து காணப்பட்டார் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் என்னை இனிமேல் உங்கள் குடும்பத்தில் உள்ளவனாய் நினைத்துக் கொள்ளுங்கள், என்ன உதவி வேண்டுமென்றாலும் என்னிடம் வந்து  கேட்கலாம். எல்லா சமயத்திலும் உங்களுடன் இருப்பேன் என்றும் விஜய் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு தாயின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார் விஜய். என் மகன் விழுந்த மாதிரி இருந்தது என்று அந்த தாய் கூறியுள்ளார். இன்னொருவர் தன் மகள் விஜயுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்த கூட்டத்திற்கே சென்றிருக்கிறார். போன இடத்தில்தான் அந்த நபரின் மகளும் இறந்து போயிருக்கிறார். விஜய் வீடியோ காலில் பேசும் போது அந்த நபர் ‘என் மகளின் ஆசை உங்களுடன் போட்டோ எடுப்பதுதான். 

அதனால் அவர் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வர்றேன். புகைப்படம் எடுக்கணும்’ என சொன்னாராம். அந்த நபர் சொன்ன மாதிரியே அந்த சிறுமியின் புகைப்படத்துடன் விஜய் போட்டோ எடுத்துக் கொடுத்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *