TVK Vijay; தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைக் காண பல்லாயிரம் பேர் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் மயங்கி விழுந்து, மூச்சு திணறி 41 பேர் வரை உயிரிழந்து விட்டனர். இதில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம். விஜய் வேனின் மீது நின்று பேசிக்கொண்டிருந்த போதே இந்த சோக சம்பவம் அங்கே அரங்கேறியது.

இந்த தகவல் விஜய்க்கு சொல்லப்பட்டும் அவர் திருச்சி விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிவிட்டார். இது கடும் விமர்சனத்தை கிளப்பியது. ‘விஜய் உடனே சென்று அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்க வேண்டும். மக்களுடன் நின்றிருருக்க வேண்டும்’ என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். அதோடு, விஜயை திமுகவினர் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆனால் காவல்துறை அங்கிருந்து சென்றுவிடுங்கள் என சொன்னதால்தான் அங்கிருந்து கிளம்பினேன் என விஜய் தரப்பு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. விஜயின் அரசியல் வாழ்வில் இது ஒரு பெரும் களங்கமாகவே மாறி இருக்கிறது. இதை எப்படி துடைத்து மீண்டு வருவார் என்பது தெரியவில்லை.

vijay

இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவில்லை. தற்போது அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் விஜய் தரப்பில் பல பாதுகாப்பு அம்சங்களை கேட்டு காவல்துறையினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள், ரசிகர்கள் வரக்கூடாது, ஊடகங்கள், பத்திரிகையாளர்களை அனுமதிக்க கூடாது, ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து நான் சந்திக்கப் போகிறேன் அங்கு அவர்களை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் விஜய்.

இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குனர் சேரன் ‘உயிரிழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவழைத்து பார்த்துதான் ஆறுதல் சொல்லுவீங்களா சார்? இது ரொம்ப தப்பு விஜய்.. ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் போவதுதான் மரியாதை.. அப்போதுதான் உங்கள் மீதுள்ள களங்கம் நீங்கும். அது முடியாது என்றால் உங்களோடு மக்களால் நிற்க முடியாது’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த சச்சின் பட இயக்குனர் ஜான் ‘இது பக்குவமில்லாத பேச்சு.  ஒவ்வொரு வீட்டுக்கும் விஜய் சென்றால் அங்கு என்ன நடக்கும்?’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சேரன் ‘ ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்தில் வந்து எனக்காக நிப்பான் அப்படிங்கிற நம்பிக்கையை உருவாக்கணும். அது முடிவில்லை என்றால் வளர்த்துக்கணும். ரசிகர் மன்றங்களாக இருக்கும் வரை யாரும் கேட்கவில்லை. எங்களை எப்போ ஆள வேண்டும் என்று வருகிறீர்களோ அப்பொழுதுதான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க.. தப்பா சொல்லி ஏத்தி விடாதீங்க’ என கொஞ்சம் கோபமாகவே பதிவிட்டிருக்கிறார் சேரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *