TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் முன்பு பேசினார். நாமக்கல்லில் பேசிவிட்டு அவர் அங்கிருந்து கரூர் சென்ற போது இரவு ஏழு மணி ஆகிவிட்டது. விஜய் வருகிறார் என்பது என்பதனால் காலை 11 மணி முதல் பொதுமக்களும், ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் அவருக்காக காத்திருந்தனர். விஜய் 12:30 மணிக்கு வருவார் என சொல்லப்பட்டது ஆனால் அவர் வருவதற்கு ஏழு மணி ஆகிவிட்டது.

விஜய் அங்கு வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் வரை மரணம் அடைந்து விட்டனர். இந்த இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு விஜயும் அவர்களின் கட்சி நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்’ என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சொல்லி வருகிறார்கள். ஆனால் தவெகவினரோ ‘இது திமுகவின் திட்டமிட்ட சதி.. கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை விட்டார்கள்கள், செருப்பு வீசினார்கள், கல் வீசினார்கள். இதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என புகார் கூறி வருகிறார்கள்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் தவெக நிர்வாகிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு பக்கம் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்று வீடியோ வெளியிட்ட விஜய் ‘உண்மையில் என்ன நடந்தது என்பது விரைவில் வெளியே வரும். முதல்வர் அவர்களே என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என் கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்காதீர்கள்’ என பேசி இருந்தார். இந்த வீடியோ வெளிய வந்தபின் விஜய் மீதான விமர்சனங்கள் அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும், விஜய்க்கு மிகவும் நெருக்கமானவருமான ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு சென்ற கரூர் போலீசார் விஜய் பயன்படுத்திய பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்குமாறு அவரிடம் சம்மன் அளித்துள்ளனர். ஒருபக்கம் அவர் மீது 5 பிரிவில் போலீசார் வழக்குப்பதிவும் செய்திருக்கிறார்கள். எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தவெக துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் அவர்கள் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். எனவே அவரிடம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் அரசான திமுக மீதும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் பல புகார்களை தவெகவினார் சொல்லி வருவதால் விஜய் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய வாகனத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் கிடைத்தால் அதில் பல உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *