நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். மேலும் பேசும் மேடைகள் எல்லாம் திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.. குறிப்பாக, சமீபத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் ‘திமுக தீயசக்தி.. அதிமுக ஊழல் அடிமை கட்சி’ என்று விமர்சித்தார். மேலும் என்னை பார்த்தால் அழுத்தத்திற்கு பயப்படுபவன் போல் இருக்கிறதா?. நம்மகிட்ட அது நடக்கவே நடக்காது… என்றும் பேசினார்.
இதையடுத்து, அதிமுக, திமுக இரண்டுமே தற்போது விஜயை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கி விட்டார்கள். குறிப்பாக தனது திரைப்படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவரின் அப்பாவும் ஜெயலலிதா முன்பு கைகட்டி நின்றார்கள்.. அந்த விஜய்தான் இப்போது வீரமாக பேசிக்கொண்டிருக்கிறார்’ என அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம், அதிமுகவினரும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து இந்த கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சி ‘ஜெயலலிதா மேடம் என்னை சந்திக்க வருமாறு அழைத்தார்.. எல்லோரையும் போல் அவரின் காலில் விழக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.. அவரின் வீட்டுக்கு செல்லும்போது விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஆகியோரை என்னுடன் அழைத்துச் சென்றேன்.. உள்ளே போனதும் அவரின் காலில் விழக்கூடாது என அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டேன்..
நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா என்னிடம் கேட்டார்.. நான் ஒப்புக்கொண்டேன்.. உங்கள் மகனை அதிமுகவுக்கு ஆதரவாக பேச சொல்லுங்கள் என்று கேட்டார். நான் ‘வேண்டாம்மா.. அவன் சின்ன பையன்’ என்றேன்.. ‘நான் அதிமுகவை ஆதரிக்கிறேன்’ என ஒரு வீடியோ போட சொல்லுங்கள்’ என்று கேட்டார்.. ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை.. அவருக்கு அந்த கோபம் இருந்தது.. அதனால்தான் பழிவாங்கினார்’ என சொல்லியிருக்கிறார்.
விஜயின் தலைவா படம் வெளியானபோது 2 நாட்கள் அப்படத்தை ரிலீஸாகவிடாமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது.




