
மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி பல அவமானங்களை சந்தித்து, அதன்பின் வாய்ப்புகளை பெற்று துவக்கத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து, இடையிடையே வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னேறியவர்தான் விஜயகாந்த்.
அவரிடத்தில் யாராக இருந்தாலும் சினிமாவை விட்டு போய் இருப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் முயற்சிகள் செய்து முக்கிய இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோருக்கு போட்டி நடிகராக விஜயகாந்த் மாறினார். அவர்கள் இரண்டு பேரின் படங்களை விட விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை பெற்றது..
விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர் என்றே அவர் அடையாளம் காணப்படுகிறார். திரைத்துறையில் இவரால் வளர்ந்தவர்கள் பலர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை விஜயகாந்த் செய்யாமல் இருந்ததில்லை. எனவேதான் அவரை மரணத்திற்கு பின்னரும் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.. ஒருபக்கம் தான் ஒரு பெரிய நடிகர் என்கிற எந்த பந்தாவும் இல்லமால் எளிமையாக வாழ்ந்தவர்தான் விஜயகாந்த்.

1992ம் வருடம் வெளியான பரதன் படத்தில் புன்னகையில் மின்சாரம் என்ற பாடலுக்கு விஜயகாந்த் பானுப்பிரியாவுடன் இணைந்து அசத்தலாக நடனமாடியிருப்பார். அந்த பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் பிரபுதேவா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘விஜயகாந்த் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது.. அவருடைய பரதன் படத்துல ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலுக்கு நான் டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சேன்.
எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவுல வந்த பாட்டிலேயே அதிக கட் இருக்கிறது அந்த பாட்டுதான். அந்த ஒரு பாட்டை 10 நாள் எடுத்தோம். அந்த பாட்டு எடுத்தப்ப அவர் பீக்ல இருந்தார்.. ஆனால் நான் என்ன பண்ண சொன்னேனே அது அப்படியே பண்ணினார். அதுதான் அவருக்கு முதல் சினிமா மாதிரி நடந்துகிட்டார்.. அவர் ஒரு தங்கம்.. அவர் மாதிரி வராது’ என புகழ்ந்து பேசியிருக்கிறார்.