latest news
தவெக மேடையில் சரமாரி கேள்வி எழுப்பிய முன்னாள் ரஜினி மன்ற நிர்வாகி! மிரண்டுபோன ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேடையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா முன்பாகவே, கட்சியின் தொண்டர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஆதரவாகப் பேசிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுக அரசைக் கண்டித்து தவெக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசியபோது, ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் அவர் அரசியலுக்கு வரவில்லை. தற்போது திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களிலேயே அவர் நடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால், விஜய்க்கு அந்த மன தைரியம் அதிகமாக இருப்பதால்தான் அவர் நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளார் என பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) பக்கத்தில், காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தவெக பொதுக்கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்திருக்க, தவெக தொண்டர் ஒருவர் ஒலிவாங்கியைக் கையில் எடுத்தார்.
அவர் பேசுகையில், நான் 45 வருடங்களாக ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பில் இருந்தேன். தற்போது மாற்றுக்கட்சியில் (தவெக) இணையும்போது அந்தப் பொறுப்பில் இருப்பது சரியாக இருக்காது என்பதால் அதை ராஜினாமா செய்துவிட்டேன். ரஜினி சார் ஒரு அற்புதமான மனிதர். அவர் குறித்து யார் தவறாகச் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பயந்தவர் கிடையாது; மிகப்பெரிய போராட்ட குணம் உடையவர் என்று பேசினார்.
மேலும் மேடையில் அமர்ந்திருந்த ஆதவ் அர்ஜுனாவை நோக்கி, ஆதவ் அர்ஜுனா சார் அவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கிறேன். நீங்கள் எந்த எண்ணத்தில், பொதுவெளியில் ரஜினி சார் குறித்து அப்படிப் பேசினீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உலகில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்… ரஜினி சாரைப் பற்றி இனி யாராவது தவறாகப் பேசினால், உங்கள் சார்பில் நான் முன்னின்று கேள்வி கேட்பேன் என்று அதிரடியாகப் பேசினார்.
தங்கள் கட்சியின் மேடையிலேயே, தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியைப் பார்த்து, ரஜினிக்காகத் தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் தவெக மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் ஆதவ் அர்ஜுனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
