---Advertisement---

நடிகர் நாடாளலாம் என நிரூபித்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே; இன்னொருவர் பிறக்க வாய்ப்பில்லை – நடிகர் சிவகுமார்

Published on: March 22, 2026
sivakumar
---Advertisement---

தமிழக தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பு யாவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழக அரசியலின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாட்டை ஆண்ட நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தனி இடம் உண்டு. அவரது மறைவுக்குப் பிறகு, சிவாஜி கணேசன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு தேர்தலைச் சந்தித்தபோதிலும், அவர் படுதோல்வியையே தழுவினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஒரு முன்னணி நடிகையாக இருந்தபோதிலும், அவர் தனிக்கட்சி தொடங்காமல் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் மூலமாகவே முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். இவர்களைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் அரசியல் களத்தில் குதித்தாலும், அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் மட்டுமே. 2006-ம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி களமிறங்கிய அவர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். மாற்று சக்தியாக உருவெடுத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்த அவரின் அரசியல் பயணம், எதிர்பாராத உடல்நலக்குறைவால் சரிவைச் சந்தித்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார் ஒரு நடிகர் நாடாளலாம் என்பதைத் தமிழகத்தில் நிரூபித்துக் காட்டியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவரைப் போல் இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. எம்.ஜி.ஆருக்கு இணையாக மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு பெற்றிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட அரசியலில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை;, அவர் தோல்வியையே சந்தித்தார், என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், தற்போதைய முன்னணி நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். சிவகுமாரின் இந்த பேச்சு தன்னை அடுத்த எம்ஜிஆராக நினைத்துகொண்டிருக்கும் விஜய்க்கு ஒரு எசரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய், வரவிருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எம்.ஜி.ஆரைப் போல அவர் வெற்றிவாகை சூடுவாரா அல்லது மற்ற நடிகர்களைப் போல அரசியல் களத்தில் சறுக்குவாரா என்பதற்கான விடையை எதிர்வரும் தேர்தல் முடிவுகள் மட்டுமே கூறும்.