சிவாஜியைப் பாடி காட்டச் சொன்ன சத்யராஜ்...! எத்தனை வயதில் இப்படி கேட்டார் என்றால் அசந்துருவீங்க..!

1997ல் நடிகர் சத்யராஜ் ஒரு பத்திரிகை இதழுக்கு அளித்த பேட்டியில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவருடனான நட்பு குறித்தும் இவ்வாறு கூறியுள்ளார்.

நடிகர் திலகம் எங்கள் 40 ஆண்டுகால குடும்ப நண்பராக இருக்கிறார். எங்கள் சித்தப்பா துரைராஜின் திருமணம் 1958ம் ஆண்டில் கோவையில் நடந்தது. அப்போது அதற்கு சிறப்பு விருந்தினராக சிவாஜிகணேசன் வந்து இருந்தார்.

அப்போது காத்தவராயன் படம் ரிலீஸாகி தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது. அப்போது எனக்கு 4 வயது. வந்திருந்தவர் சிவாஜி எனத் தெரியாது. காத்தவராயன் நேரில் வந்துள்ளார் என்று தான் எண்ணியிருந்தேன்.

Kathavarayan Sivaji

அப்படத்தின் பாடல்களைப் பாடிக்காட்டுமாறு சிவாஜியிடம் சொன்னேன். முதன்முதலில் சிவாஜி அவர்களை அப்போது தான் நான் சந்தித்தேன். விவரங்கள் தெரியாத வயது.

அப்போது 1977ல் சென்னைக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன். சினிமாத்துறையில் எனக்குத் தெரிந்த ஒரே நபர் சிவகுமார் தான். அவரிடம் சான்ஸ் கேட்டேன். அவரும் சிபாரிசு செய்தார்.

நடிகர் திலகம் பேசிய வீர வசனங்கள் அடங்கிய புத்தகங்களை சிவகுமார் என்னிடம் தந்து படித்துப் பார்த்து, அதற்கேற்ப நடிப்பினை வளர்த்துக் கொள்ள உதவினார். சிவாஜியின் வீர வசனங்களை மனப்பாடம் செய்து நடித்துக் காட்டுவேன்.

சிவகுமாரும் பாராட்டுவார். சின்ன சின்ன ரோல்களில் 10 படங்களில் தலைகாட்டினேன். சிவாஜியின் படமான ஹிட்லர் உமாநாத் தான் நான் அவருடன் முதன் முதலில் நடித்தேன்.

Sathyaraj

என் திறமையையும், 4 வயதில் நடந்த சம்பவங்களையும் நினைவு கூர்ந்த தன்மையையும் கண்டு என்னை மேலும் உற்சாகப்படுத்தினார். அவரது சந்திப்பு, நீதியின் நிழல், சிரஞ்சீவி என்று தொடர்ந்து பல படங்களில் பல கேரக்டர்களில் என்னை நடிக்க வைத்தார்.

அவருடன் இணைந்து நான் நடித்த புதிய வானம், முத்துக்கள் மூன்று, ஜல்லிக்கட்டு அனுபவங்களை மறக்கவே முடியாது. எம்ஜிஆர் கடைசியாக கலந்து கொண்ட திரைப்பட விழா ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழா.

Jallikkattu

அவ்விழாவில் எம்ஜிஆர் சிவாஜிக்கு தன் கையால் கேடயம் வழங்கினார். சிவாஜியின் படங்களான பாகப்பிரிவினை, தெய்வமகன், தில்லானா மோகனாம்பாள், கௌரவம், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற படங்களுக்காகவே அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

சில பல அரசியல் காரணங்களுக்காக அவை வழங்கப்படவில்லை. வெளிநாடுகள் பல அவரது நடிப்பைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.

எனது வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற பல படங்களை அவருக்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டியிருக்கிறேன். அவருடன் ஆரம்ப காலத்தில் குடும்ப நண்பராக இருந்த நான், இப்போது குடும்ப உறுப்பினராகவே ஆகி விட்டேன்.

அவரது சகோதரர் வி.சி.சண்முகத்தின் மகன் கிரிக்கு, எங்கள் உறவுக்காரப் பெண்தான் மனைவி. தந்தை பெரியார் கொடுத்த சிவாஜி பட்டத்துக்கு இணையாக வேறு எதையும் கூற முடியாது.

அவருக்கு தற்பொழுது அளிக்கப்பட்டிருக்கும் தாதா சாகேப் பால்கே விருது கால தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. அதை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சிவாஜியால் அந்த விருதுக்குத்தான் பெருமை.

 

Related Articles

Next Story