துபாயில் இருந்து சென்னை திரும்பிய அஜித்!

Published on: March 10, 2026
ajith

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் குமார் இன்று பத்திரமாக சென்னை வந்தடைந்தார்.

நடிகர் அஜித் குட் பேட் அக்லி வெற்றிக்கு பிறகு, கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பயிற்சிக்காக அபுதாபி மற்றும் துபாயில் உள்ள சர்வதேச ரேசிங் டிராக்குகளில் தனது குழுவினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் போர் பதற்றம் உருவானது. தொட்ர்ந்து போர் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அஜித் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

அஜித் துபாயில் சிக்கிய செய்தி பரவியதும் அவரது ரசிகர்கள் பெரும் கவலை அடைந்தனர். இதற்கிடையே, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் துபாயில் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார், நிலைமை சரியானதும் அவர் சென்னை திரும்புவார் என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று அஜித் சென்னை திரும்பினார். இனி தனது 64-வது படமான AK64′ பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.