ரஜினி மனசு விஜய்க்கு இல்லையே!.. கூலி ரிலீஸுக்கு அடுத்த நாளே இப்படி ஒரு ஆப்பா?!...
Rajini Vijay: சினிமாவில் விஜய் - அஜித் போட்டி போய் இப்போது விஜய் - ரஜினி போட்டி என்பது வந்துவிட்டது. ஏனெனில் ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார். ரஜினி படங்களை விட விஜயின் படங்கள் அதிக வசூலையும் பெறுகிறது. எனவே, விஜய்தான் சூப்பர்ஸ்டார் என சிலர் பேச துவங்கினார். இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அதோடு, ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கழுகு - காக்கா கதையை சொல்ல அவர் காக்கா என சொன்னது விஜயைத்தான் என விஜய் ரசிகர்கள் நினைத்தார்கள். இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ரஜினியை மிகவும் மோசமாக விமர்சிக்கவும், திட்டவும் துவங்கினார்கள்.
நான் விஜயை சொல்லவில்லை என ரஜினி சொல்லியும் அவர்கள் அடங்கவில்லை. ரஜினியின் வேட்டையன் படம் வந்தபோது முதல் காட்சி முடிந்தவுடனேயே படத்திற்கு எதிராக டிவிட்டரில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டார்கள். இது கூலி மற்றும் ஜெயிலர் 2 படம் வெளியானபோதும் நடக்கும். ஏனெனில் விஜய் ரசிகர்கள் மாறப்போவதில்லை.
ஒருபக்கம் ரஜினி கேப் விடாமல் சினிமாவில் நடித்து வரும் நிலையில் விஜயோ அரசியலுக்கு போகவிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறது. விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ரஜினியின் கூலி படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ஆகஸ்டு 15ம் தேதி விஜய் தனது அரசியல் பயணத்தை துவங்கிவிருக்கிறார்.
அதாவது, மாவட்ட வாரியாக தனது சுற்றுப்பயணத்தை அவர் தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கான பணிகள் இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 15ம் தேதி விஜய் இதை செய்தால் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுவே பேசுபொருளாக மாறும். கூலி படத்தின் மீது கவனம் குறையும். விஜய் இதை திட்டமிட்டு செய்யமாட்டார் என்றாலும் நடக்கப்போவது இதுதான்.
கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் 21ம் தேதியே வெளியாகவிருந்தது. ஆனால், அடுத்த நாள் அதாவது ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அன்று பாடலை வெளியிட வேண்டாம் என ரஜினியே சொன்னதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஜூன் 25ம் தேதியான இன்று கூலி ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினி இப்படி யோசிக்கும்போது விஜய் இப்படி செய்யலாமா என சிலர் பேச துவங்கிவிட்டனர்.