Thuglife: சுத்தத் தமிழ் வீரம்... பாட்டு ஞாபகமிருக்கா? கமலுக்கு அப்படியே மேட்ச் ஆகுதே..!
தக்லைஃப் பட விழாவில் கன்னட மொழி பற்றி பேசி சர்ச்சைக்குள்ளானார் கமல். இதனால் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு. தொடர்ந்து படத்தை வெளியிட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5ல் படம் ரிலீஸ் ஆகிறது.
'சுத்தத் தமிழ் வீரம்... ரத்தத்துல ஊறும்.. சிங்கத் தமிழன்... சங்கத் தமிழன்'னு கமல் தேவர்மகன்ல பாடி ஆடுவார். அதே பாடலில் தொடர்ந்து 'எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு, புத்தி இருக்கு. சக்தி இருக்கு'ன்னு முறுக்கி இருப்பார் கமல். சாந்து பொட்டு என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் தமிழர்களை உசுப்பி எழச் செய்யும் வகையில் இருக்கும். அது படத்தில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் கடைபிடித்து வருகிறார் என்பதுதான் உண்மை.
சமீபத்தில் நடந்த தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் அவர் பேசிய ஒரு வார்த்தை சர்ச்சையாகி கர்நாடகமே பற்றி எரிகிறது. விழாவிற்கு வந்த சிவராஜ்குமாரைப் பார்த்து தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என்று சொன்னார் கமல். அதற்கு கர்நாடக முதல்வர் சித்த ராமையா, எடியூரப்பாவின் தம்பி என பலரும் போர்க்கொடி தூக்கினர். கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார். கன்னட வரலாறு நீண்டது... நெடியது என சித்தராமையா பேசி இருந்தார்.
அதற்கு கமல் நான் அறிந்த வரலாறைத் தான் சொன்னேன். இதை மொழியியல் ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டு விடுவோம். அவர்களே சரியான பதில் தருவார்கள். ஆனாலும் அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக கமல் பதிலடி கொடுத்தார்.
கமல் படத்தை ஓட விட மாட்டோம் என ரசிகர்கள் தக் லைஃப் பேனரைக் கிழித்தனர். கர்நாடகாவைப் பொருத்தவரை தக் லைஃப் 13 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பேசுற மலையாள மொழியின் தந்தை தமிழ். ஆந்திராவின் தெலுங்குல அத்தனைத் தமிழ்ச் சொற்கள் இருக்கு. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி தமிழ். அதில் இருந்து பிரிந்ததுதான். திராவிடர்கள்னு நாம சொல்லிக்கிட்டு இருக்கோம். நார்த்ல போய் பார்த்தா ஹைதராபாத் காரன், கொச்சின்காரன், பெங்களூருகாரன்னு சொல்லவே மாட்டான்.
ஒட்டுமொத்தமா மதராஸின்னு சொல்வான். அவனே அப்படி சொல்லும்போது நாம எதுக்கு சண்டை போடணும்? கமல் திட்டமிட்டு பப்ளிசிட்டிக்காகத் தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்காருன்னு சொல்றாங்க. கன்டன்ட் நல்லா இருக்கு. கமலுக்கு இப்படி எல்லாம் பப்ளிசிட்டி தேவையில்லை. விஸ்வரூபம் சமயத்தில் இப்படித்தான் பிரச்சனை. அவருக்கு நிறைய எதிர்வலைகள் வந்தன. அதை சாதகமாகப் பயன்படுத்தி கமல் விஸ்வரூபத்தை ஹிட் அடித்து விட்டார் என்றார்கள்.
கமலுக்கு நல்லாவே தெரியும். கன்டன்ட் நல்லா இருந்தால் தான் படம் ஓடும் என்பதும் தெரியும். அதனால் கமலுக்கு பப்ளிசிட்டி தேவையில்லை. கமல் தன் முடிவில் இருந்து இறங்கி வராமல் இருந்ததை தலைவணங்கி வரவேற்போம் என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி'ன்னு தமிழின் தொன்மையை எடுத்துச் சொல்லி இருக்காங்க. அதனால தமிழ் தான் திராவிட மொழிகளுக்கு மூலம்னு சொல்லலாம்.