பாரதிராஜாவுக்கு டிரைவராக இருந்த இளவரசு... 3 நாள் சம்பளமாக கொடுத்தது எவ்ளோ தெரியுமா?
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் பாண்டியன், ரேவதி நடிப்பில் வெளியான மண்வாசனை படம் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கண்ணன். படப்பிடிப்பு நடந்த சமயம் நடிகர் இளவரசு ஒளிப்பதிவாளர் கண்ணனிடம் உதவியாளராக வேலை பார்த்தார். அதன்பிறகு பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் மரியாதை படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடந்த சம்பவம் குறித்து இளவரசு என்ன சொல்றாருன்னு பாருங்க.
இயக்குனருக்கு ஓட்டுநர் இல்லாத சமயம். நான் தான் கார் ஓட்டப் போவேன். அப்போது 3 நாளாக நான் தான் கார் ஓட்டிக் கொண்டு இருந்தேன். அதைக் கவனித்தார் பாரதிராஜா. என்னை விசாரித்து விட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
இந்தா இதை வச்சுக்க. உனக்கு எப்ப செலவுக்கு காசு வேணும்னாலும் தயங்காம எங்கிட்ட வந்து கேளு என்றவாறு என் கையில் 500 ரூபாய் தாளைக் கொடுத்தார். அவருக்குக் கார் ஓட்டுவதையே நான் பாக்கியமாக நினைத்துக்கொண்டு இருந்தேன்.
எனக்கு அவர் கையால் பணம் கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. இந்த மகிழ்ச்சியோடு அந்த ரூபாய் நோட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே ஜெமினி மேம்பாலம் இருக்கும் அவரது வீட்டுல இருந்து கோடம்பாக்கத்துல இருக்குற என் வீடு வரைக்கும் நடந்தே போனேன். 80களில் 500 ரூபாய் என்பது பெரிய விஷயம். மதிப்பு அதிகம். அதுவும் பாரதிராஜாவிடம் இருந்து நான் பெற்றது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது என்கிறார் இளவரசு.
1983ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் மண்வாசனை படம் வெளியானது. சித்ரா லட்சுமணன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். பாண்டியன், ரேவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. பாடல்கள் எல்லாமே தேன் சொட்டும் ரகங்கள். பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது. 1985ல் சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய படம் முதல் மரியாதை. இந்தப் படத்தின் இசை அமைப்பாளரும் இளையராஜா தான். பாடல்களும், படத்தின் வசனமும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.