விஜயகாந்த் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!. உடனே ஆர்டர் போட்ட கமல்!.. செம பிளாஷ்பேக்!...

By :  MURUGAN
Update: 2025-05-17 06:16 GMT

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்பவர்களுக்கு உணவு வழங்கும் முறையை மாற்றியவர் விஜயகாந்த். ஏனெனில், எல்லோரும் சமம் என கருதும் நபர் அவர். பொதுவாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு மேலே வந்த ஒருவர் நம்மை போல் யாரும் கஷ்டப்படக்கூடாது என நினைத்தால் அப்படி செய்தால் அதில் ஒரு லாஜிக் உண்டு.

ஆனால், விஜயகாந்த் ஒன்றும் ஏழை வீட்டில் பிறந்தவர் இல்லை. விஜயகாந்தின் அப்பா மதுரையில் பிரபலமான ரைஸ் மில்லை நடத்தி வந்தவர். பணக்கார வீட்டில் பிறந்தவர்தான் விஜயகாந்த். அப்படி இருக்கும் எல்லோரும் சமம் என்கிற மனநிலை அவருக்கு இயற்கையாகவே இருந்தது.

சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து நடிக்க துவங்கியபோது பல அவமானங்களை சந்தித்திருக்கிறார். சாப்பிட கூட விடாமல் நடிக்க வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். சினிமா உலகில் காலம் தொட்டே ஒரு நடைமுறை இருக்கிறது. படப்பிடிப்பு தளங்களில் மூன்று வகையான உணவுகள் பரிமாறப்படும்.


ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் ஆகியோருக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு வரும். உதவி இயக்குனர்கள், மற்ற நடிகர்கள் ஆகியோருக்கு சின்ன ஹோட்டலில் இருந்து உணவு வரும். படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களுக்கு பொட்டல சாப்பாடு கொடுக்கப்படும். அல்லது சாதாரண சாப்பாடு, குழம்பு போன்றவை கொடுக்கப்படும்.

சில கம்பெனிகளில் பெரும்பாலானோருக்கு பொட்டல சாப்பாடுதான் கொடுப்பார்கள். கமலின் நாயகன் படமும், விஜயகாந்தின் உழவர் மகன் படமும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டபோது கமல் உழவர் மகன் ஷூட்டிங் நடக்கும் இடத்தை பார்த்திருக்கிறார். அப்போது எல்லோரும் கறி சாப்பாடு சாப்பிடுவதை பார்த்து ‘இது பெரிய கம்பெனியா?’ எனக் கேட்டிருக்கிறார்.

பெரிய கம்பெனியெல்லாம் ஒன்றுமில்லை. விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் கம்பெனி. தினமும் எல்லோருக்கும் இலை போட்டு கறி சாப்பாடு போடுவார்கள் என சொல்லியிருக்கிறார்கள். நாயகன் படப்பிடிப்பில் பொட்டல சாப்பாடு கொடுத்திருக்கிறார்கள். இதைப்பார்த்த கமல் ‘எல்லோருக்கும் இலையில் சாப்பாடு போடுங்கள்’ என சொல்லியிருக்கிறார். இந்த தகவலை விஜயகாந்தே தன்னிடம் சொல்லியதாக சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News