எம்.ஆர்.ராதாவின் சாதனைகளுக்கு எல்லாம் புள்ளி வச்சவரே அவர்தானாம்..! இப்பதானே தெரியுது!
தமிழ்சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகர் எம்ஆர்.ராதா. எப்பேர்ப்பட்ட அசாதாரண மான நடிப்புத்திறன் கொண்டவர் என்பது நாமறிந்த விஷயம். நாடக உலகிலும், திரை உலகிலும் பல சாதனைகள் செய்தார் என்றால் அதற்கெல்லாம் ஆதார சுருதியாக இருந்தவர் நாடக நடிகர் முத்துக்கிருஷ்ணன். எம்ஜிஆர், சிவாஜி, டிஎஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் தான் முத்துக்கிருஷ்ணன்.
ராஜாம்பாள் என்ற நாடகக் கம்பெனியில் நடிகராக மட்டும் இல்லாமல் நாடக ஆசிரியராகவும் இருந்தார் முத்துக்கிருஷ்ணன். அப்போது அந்த நாடககம்பெனி பதி பக்தி என்ற நாடகத்தை நடத்திக் கொண்டு இருந்தது. அதில் கங்காதரன் என்ற வில்லன் வேடத்தில் பிச்சி உதறுவார் முத்துக்கிருஷ்ணன். அவரது நடிப்பைப் பார்ப்பதற்காகவே பலரும் வருவர். முத்துக்கிருஷ்ணன் அந்த நாடகக் கம்பெனியில் முக்கியமான வேடத்தில் நடித்துக் கொண்டு இருந்த போது சின்ன சின்ன வேடங்களில் எம்.ஆர்.ராதா நடித்து வந்தார்.
ஒருமுறை பதிபக்தி நாடகத்தில் நடித்தபோது முத்துக்கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நாடகத்தை நிறுத்தி விடலாமான்னு நாடகக் கம்பெனியில் யோசித்தார்கள். அந்தத் தப்பை மட்டும் பண்ணிடாதீங்க. அந்த வேடத்தில் நடிக்கக்கூடிய மிகச்சிறந்த நடிகர் ஒருவர் நம்ம நாடகக் கம்பெனியில் இருக்கிறார்.
அவர் தான் எம்.ஆர்.ராதா. அவருக்கு மட்டும் இந்த வாய்ப்பைக் கொடுத்தா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் முத்துக்கிருஷ்ணன். அதே போல எம்.ஆர்.ராதாவும் நடித்து அசத்தினார்.
அவரது நாடக வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தந்தது அந்த நாடகம்தான். அதன்பிறகு நாடக உலகிலும், திரை உலகிலும் அவர் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்தார் என்பது நாம் அறிந்த விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.