இப்படி வாரி வாரி வழங்குறீங்களே... உங்களுக்குன்னு வேணாமா? நிருபரின் கேள்விக்கு எம்ஜிஆரின் 'நச்' பதில்!
புரட்சித்தலைவர், பொன்மனச் செல்வர் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் எம்ஜிஆர். இவரை எட்டாவது கொடை வள்ளல் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவார். அவரைப் பின்பற்றி வந்தவர்தான் கருப்பு எம்ஜிஆர் என்றழைக்கப்படும் விஜயகாந்த். இருவரும் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் இவர்களது அருஞ்செயல்கள் அவர்களை இன்றும் நம்மிடையே நினைவுபடுத்தி வருகின்றன. அந்த வகையில் எம்ஜிஆர் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.
'உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்குணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே. அதுக்கு என்ன காரணம்?'னு எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்கிறார் ஒரு நிருபர். அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் இதுதான். சொத்துக்கள் கடைசி வரை நம்மிடம் இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கறதுதான் என் கருத்து.
என்னை முதன் முதலா ஹீரோவாக நடிக்க வைத்தவர் ஜூபிடர் சோமு. ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரில் வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டுடியோவுக்கு பங்குதாரரா இருக்கேன். என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவர்.
அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டுடியோவுக்கு முதலாளியா இருக்க முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா சிலர் சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும், பணத்தையும் சேர்த்து வச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பில் இல்லாதது. சட்டத்தின் பாதுகாப்பில் நாம எத்தனை நாள் வாழ முடியும்?
அது மட்டுமா? இந்த செல்வம் எல்லாம் யார் தந்தது? மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததில் இருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படற மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும்போது அடையற மகிழ்ச்சியையே நான் பெரிசா நினைக்கிறேன்னு சொன்னார் எம்ஜிஆர்.