Flash Back: இளையராஜாவை கேலி செய்த ஜேசுதாஸ், ஜானகி... ஆனா அடுத்து நடந்ததுதான் வேற லெவல் சம்பவம்!

By :  SANKARAN
Published On 2025-06-12 19:13 IST   |   Updated On 2025-06-12 19:13:00 IST

தமிழ்த்திரை உலகில் இன்னிசைத் ததும்ப பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் ராகதேவன் இளையராஜா. அவரது இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, ஜேசுதாஸ், ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளனர். இவை எல்லாமே சூப்பர்ஹிட். குறிப்பாக 80ஸ் ஹிட்ஸை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலின் உருவாக்கமும் ஒரு கதை சொல்லும். அப்படி உருவான அற்புதமான பாடல்தான் இது. வாங்க இது என்ன கதை சொல்லுதுன்னு பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம் படத்தில் தூங்காத விழிகள் ரெண்டு என்று ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடல் பதிவானது ஒரு மதிய வேளையில் நடந்தது. அது ஒரு கோடைகாலம். அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை முறைப்படி பாடினால் மழையே வந்துவிடும். பாடலின் டிராக்கைக் கேட்டதும் ஜேசுதாஸ்சும், ஜானகியும் ராஜாவைப் பார்த்து சிரித்தபடி கேலி செய்தார்களாம்.

இந்தப் பாடல் அமிர்தவர்ஷினி ராகத்துல இருக்கு. மழை வரலன்னா திட்டாதீங்கன்னு கூட ராஜாவைப் பார்த்து சொன்னாங்களாம். பாடல் பதிவு முடிந்ததும் ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்தாங்களாம். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டியதாம். எல்லாருக்குமே நம்ப முடியாத அதிர்ச்சி. அதுவும் சுட்டெரிக்கும் கோடை நேரம். இப்படி ஒரு அடைமழையா என அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்களாம். ஜானகியே இதை மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார். 


1988ல் மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் அக்னி நட்சத்திரம். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். நின்னுக்கோரி, ஒரு பூங்காவனம், ராஜா ராஜாதி, ரோஜா பூ ஆடிவந்தது, தூங்காத விழிகள், வா வா அன்பே ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Tags:    

Similar News