எம்.ஜி.ஆர் என்கிட்ட ஒன்னு கேட்டார்!. ஆனா பண்ண முடியல!.. விண்வெளி நாயகன் ஃபீலிங்!..
Kamalhaasan: 4 வயது சிறுவனாக இருக்கும்போது களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க துவங்கியவர்தான் கமல்ஹாசன். சிறு வயது முதலே சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், சாவித்ரி, ஜெமினி கணேசன், ஏ.விஎம், போன்ற சினிமாவின் முக்கிய ஆளுமைகளின் நிழலில் வளர்ந்ததால் சின்ன வயதிலேயே சினிமாவை கற்றுக்கொண்டார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் சிறுவனாக நடித்த கமல் டீன் ஏஜ் வயது எட்டும் வரை சினிமாவில் நடிக்கவில்லை. படிப்பு வேண்டாம் என முடிவு செய்த கமல் சினிமா துறைக்கு செல்வதா அல்லது வேறு எதாவது வேலை செய்வதா என யோசித்தார். சினிமாவுக்கு போகலாம் என முடிவெடுத்து அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார்.
அதன்பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் கதையின் நாயகனாகவும் மாறினார். ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்த கமல் ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினார். கமலின் முதல் அடையாளம் நடனம் என்பதாகவே இருந்தது. எனவே, கமல் நடிக்கும் படங்களில் அவர் மைக்கை பிடித்துக்கொண்டு ஆடிப்பாடும் ஒரு பாடல் கண்டிப்பாக இருக்கும்.
ஒருகட்டத்தில் தனக்கு பிடித்த சினிமாக்களை செய்ய துவங்கினார். ராஜ பார்வை, மகாநதி, ஹே ராம், குருதிப்புனல், குணா போன்ற பல பரிசோதனை முயற்சிகளையும் செய்தார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த நாயகன் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கிறது. இப்போது விரைவில் தக் லைப் வெளியாகவுள்ளது.
கமலுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருந்தது. கமலின் படங்களை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை சொல்வார் எம்.ஜி.ஆர். சகலகலா வல்லவன் படத்தை பார்த்துவிட்டு ‘இது போன்ற கதைகளில் நான் ஏற்கனவே நடித்துவிட்டேன். நீ புதிதாக எதாவது செய்’ என கமலிடம் முதலில் சொன்னவர் அவர்தான். எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு சென்று அடிக்கடி அவரை பார்க்கும் பழக்கமும் கமலுக்கு இருந்தது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கமலிடம் ‘இதை நாம் செய்யாமல் விட்டுவிட்டோமே!’ என நீங்கள் வருத்தப்படும் சம்பவம் எதாவது இருக்கிறதா?’ என்கிற கேள்விக்கு பதில் சொன்ன கமல் ‘ எம்.ஜி.ஆர் அவரின் படத்தில் என்னை நடிக்க அழைத்தார். நாளை நமதே படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடிக்க என்னை கேட்டார். அப்போது ஒரு மலையாள படத்தில் மாட்டிக்கொண்டேன். எனவே, அந்த வேடத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது’ என சொல்லியிருக்கிறார்.