நான் சிவன்.. நீ அபிராமி!.. ரசிகர்களால் மறக்க முடியாத குணா!.. ஒரு அலசல்!...

By :  MURUGAN
Published On 2025-06-12 15:57 IST   |   Updated On 2025-06-12 15:57:00 IST

Guna movie: தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களின் ரசனை இரண்டின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என ஆசைப்பட்டு சினிமாவில் அதற்கான முயற்சிகளை செய்பவர்தான் கமல். உலகப்படங்களை பார்த்து வளர்ந்தவர் என்பதால் அதுபோல தமிழ் சினிமா கதையமைப்பிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்கிற ஆசை எப்போதும் கமலுக்கு உண்டு. அதற்காக பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். அதில் ஒரு படம்தான் குணா.

படத்தின் கதை:

கமலின் நண்பர் சந்தானபாரதி இயக்கத்தில் கமல், ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்னம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கதைப்படி கமல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். மனநல சிகிச்சை மையத்தில் இருக்கும் போது ‘நீதான் சிவன். அபிராமி உன்னை தேடி வருவாள். பௌர்ணமி அன்று அவளை திருமணம் செய்துகொள்’ என மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சொல்ல அதையே வேதவாக்காக நம்புகிறார் கமல். ஒருபக்கம், கோவிலில் கொள்ளையடிக்க கமலை ஜனகராஜ் கூட்டிக்கொண்டு போக அங்கு வரும் ஒரு பணக்கார பெண்ணை தனது அபிராமி என நினைத்து அங்கிருந்து கடத்துகிறார் கமல்.


மலை உச்சியில் காதல்:

ரோஷ்ணியை ஒரு மலை உச்சியில் அடைத்து காலை சங்கிலியால் கட்டி வைக்கிறார். பௌர்ணமி வரும்போது திருமணம் என்கிற ஆசையிலும் இருக்கிறார். துவக்கத்தில் ரோஷ்ணி அங்கிருந்து தப்பிக்க முயன்றாலும் ஒரு கட்டத்தில் கமலின் தூய்மையான காதலை புரிந்துகொண்டு கமலை திருமணமும் செய்து கொள்கிறார்.

கமலை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் ஒருபக்கம், ரோஷ்ணியின் சொத்தை அடைவதற்காக அவரை கொல்ல முயற்சி செய்யும் வில்லன் கும்பல் ஒருபக்கம் என எல்லோரும் மலைக்கு வர என்னவானது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வேடத்தில் கமல் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அறிமுகமாக நாயகியாக வந்த ரோஷ்ணி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தோடு சரி. அதன்பின் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.


இளையராஜாவின் பாடல்கள்:

இந்த படத்திற்கு இளையராஜா கொடுத்த பாடல்கள் அனைத்துமே இனிமையானவவை. காலத்தையும் தாண்டி ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அப்பன் என்றும் அம்மை என்றும், பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க, உன்னை நான் அறிவேன் என இனிமையான பாடல்கள் இருந்தாலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை இப்போதுள்ள தலைமுறைகளும் ரசிக்கும்படி எவர்கிரீன் ஹிட் பாடலாக இருக்கிறது. இந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கை 2 மணி நேரத்தில் முடித்துவிட்டாராம் இளையராஜா.

படத்திற்கு கமல் எழுதிய கிளைமேக்ஸ்:

இந்த படத்திற்கு வேறு ஒரு கிளைமேக்ஸைத்தான் கமல் எழுதியிருந்தார். ஆனால், ஏக் துஜே கேலியே படத்தில் வருவது போல கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் இறந்துபோனால் படம் ஹிட் அடிக்கும் என சிலர் சொன்னதால் இறந்துபோன மனைவியை கையில் பிடித்தவாறு மலையிலிருந்து கமல் குதித்து தற்கொலை செய்துகொள்வது போல காட்சி வைக்கப்பட்டது. அப்போது கமல் பேசிய ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ என்கிற வசனம் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.


மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து தளபதி படம் வெளியான தீபாவளி நாளில் அந்த படத்திற்கு போட்டியாக குணா படம் வெளியானது. இதில், வசூல்ரீதியாக குணா தோல்விப்படமாக அமைந்தது. கொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு குகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தால் அந்த இடத்திற்கு குணா குகை என பெயர் வைக்கப்பட்டது. அந்த குகையை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற படத்தையும் எடுத்தார்கள். அதில், கண்மணி அன்போடு காதலன் பாடலும் பயன்படுத்தப்பட்டது. இந்த படம் 200 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

Tags:    

Similar News