தலைமை செயலகம் வெப்சீரிஸ்… ஆட்சி போட்டி… பார்க்க பெஸ்டா? வேஸ்டா? இத படிங்க!
Thalamai Seyalagam: தமிழ் சினிமா திரைப்படங்களை தாண்டி தற்போது ரசிகர்களை ஒரே நேரத்தில் பல மணி நேரம் டைம் பாஸை தரும் முக்கிய படைப்பாக வெப்சீரிஸ் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தலைமை செயலகம் வெப்சீரிஸின் விமர்சனம் இங்கே.
பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்க ஜெயமோகன் இதற்கு வசனம் எழுதி இருக்கிறார். கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், சந்தான பாரதி உள்ளிடோர் இந்த சீரிஸில் நடித்துள்ளனர். பொதுவாகவே இதுபோன்ற கதைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும்.
15 வருடத்திற்கு முன்னர் ஜார்கண்டில் ஒரு பெண் துடித்து கொண்டு இருக்கிறார். திடீரென அவர் கோடாரியை எடுத்து தன்னை கொடுமை படுத்தியவர்களை கொன்று விடுகிறாள். அங்கிருந்து தான் தலைமை செயலகம் சீரிஸ் தொடங்குகிறது.
தற்போது நிகழ்காலம் வருகிறது. தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் திடீரென ஒரு ஊழல் வழக்கில் சிக்குகிறார். அதற்கான வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இதில் முதல்வர் சிக்கினால் அடுத்த ஒரு தலைவர் முதல்வராக வேண்டும்.
இதற்கு அவரின் அடுத்த வாரிசாக மாறி முதல்வராக மூத்த மகள் ரம்யா நம்பீசனும், இரண்டாவது மகளின் கணவரான நிரூப் நந்தகுமாரும் தங்கள் அரசியல் மூளையை பட்டை தீட்டுகின்றனர்.
அரசியல் சதுரங்க வேட்டையில் ஒவ்வொரு கேரக்டரும் தங்களுக்கான ஆட்டத்தை ஆடுகின்றனர். சந்தானபாரதி ஒரு அமைச்சராக இருக்கிறார். சிஎம்மின் ஆஸ்தான நபர் அவருக்கு நேர்மையாக இருக்கும் மினிஸ்டர்.
இதில் வழக்கில் இரண்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வொய்ஜி மகேந்திரன் வட மாநில அரசியல் தலைமையிடம் இருந்து தங்கள் கல்லாவை கட்டிக்கொள்ள வழக்கில் விறுவிறுப்பு காட்டுகின்றனர்.
ரம்யா மற்றும் நிரூப்பை தனியாக அழைத்து பேசி பிரச்னையை மூண்ட வைத்து ஆட்சியினை கலைக்க முயற்சி செய்கின்றனர்.
முதல்வரின் மற்றொரு ஆஸ்தான பத்திரிக்கையாளராக கொற்றவை கேரக்டரில் நடித்து இருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி. இவர் முதல்வருக்கு தன்னால் முயன்ற பரிந்துரைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இருவருக்கும் ஒரு நெருங்கிய உறவு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கொற்றவையின் மகள் மாயாவிற்கும் இதில் பெரிய பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அம்மாவுடனான சண்டை மற்றும் அரசியல் பின்னணிக்குள் இவர் உள்ளே வருகிறார்.
இந்த அரசியல் போராட்டத்தில் துர்கா என்ற கேரக்டர் பரிசோதனையில் பிடிப்பட்ட கண்டெய்னரை வாங்கி கொடுக்க வேண்டும் என கொற்றாவையிடம் வருகிறார். இவர் கொடூர முகம் எதற்கும் தயங்காத வேலைகளை செய்கிறார்.
இந்நிலையில் சிபிஐ ஆபிஸர் நவாஸ் கான் என்பவர் ஜார்க்கண்டில் நடந்த கொலைகளை விசாரித்து வருகிறார். இதேப்போல் பரத் தமிழ்நாட்டின் டிசிபி வேறு இதே தேடலில் விசாரணையிலும் இருக்கிறார். கொற்றவை மற்றும் துர்காவும் இந்த சந்தேக லிஸ்ட்டில் உள்ளனர்.
தீர்ப்பு நாள் வர அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்னை தொடங்கி செல்கிறது. கதையில் வித்தியாசமான ட்விஸ்ட் வந்து ஆச்சரியப்படுத்தினாலும் கதையின் கிளைமேக்ஸ் பலருக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம் என்பதே உண்மை.
சிபிஐ அதிகாரியின் கேரக்டர் ஆரம்பத்தில் பரபரப்பாக தோன்றினாலும் பின்னர் அது முதன்மை கதையை காலி செய்வதாக இருக்கிறது. சில இடங்களில் லாஜிக் இல்லாத கதைக்கூட நமக்கே அலுப்பை தருகிறது.
அரசியல் விஷயங்கள் மிகவும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் சற்று செயலற்ற நபராக சித்தரிக்கப்பட்ட கிஷோரின் கேரக்டர் பின்னர் வேகமெடுக்கிறது. கொற்றவையின் கேரக்டர் ஓவர் கேல்குலேட்டிவ் ஆளாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நிகழ்கால அரசியலையும் சித்தரிக்க பல காட்சிகள் உள்ளன.
ஆனால் தலைமை செயலகம் பல இடங்களில் தடுமாறுகிறது. காட்சிகள் இழுபறியாக இருக்கின்றன, டயலாக் மீண்டும் மீண்டும் வருகின்றன. மேலும் எமோஷனல் காட்சிகள் மிகையாக இருக்கிறது. வலுவான கேரக்டர் ரம்யாவை அடக்க பயன்படுத்தப்பட்ட காட்சிகள் சரியாக அமைக்கப்படவில்லை. நிரூப்பின் காட்சிகளில் வலு இல்லை. கிஷோர் மற்ரும் ஸ்ரேயா ரெட்டி நடிப்பு அசல் கேரக்டர்களாகவே கண் முன் வருகிறது.
தலைமை செயலகத்தை தன்னுடைய கணிப்புப்படியே வசந்தபாலன் படமாக்கி இருக்கிறார். இருப்பினும், இந்தத் தொடர் அதன் நம்பிக்கைக்குரிய இடங்களில் பல குறைகளை கொண்டுள்ளது. ஆனால் யூகிக்கக்கூடிய கதை திருப்பங்கள், எபிசோட் நீடிக்கப்பட்ட திரைக்கதை நமக்கு அலுப்பை தருகிறது. வித்தியாசமாக பரபரப்பான வெப்சீரிஸ் பார்க்க விரும்பினால் ஜீ தமிழில் இதை பார்க்க தவறாதீர்கள்.