55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு இன்று வந்திருந்தார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், பகல் 12 மணிக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றினார் விஜய்.
நடந்தது என்ன?
பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஈரோடு பொது கூட்டம் எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற்ற நிலையில் சேலம் நிகழ்ச்சியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்:

மதிய வெயிலில் பந்தல் போடாமல் மேலும் ஒரு உயிரிழப்பு. இவரது வீட்டாரையும் பனையூர் வரச்சொல்லி நஷ்டஈடு தருவார் போல எனக் குறிப்பிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
