உன் மூஞ்சிக்கு சினிமா ஒரு கேடா..? கேட்ட கேள்விக்குப் பதிலடி தான் டிஆரின் தாடி ரகசியமாம்!

தமிழ்த்திரை உலகில் சகல கலைகளையும் கற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர். இவரது மகன் தான் எஸ்டிஆர்.
அந்தக் காலகட்டத்தில் டிஆர் சினிமாவுக்கு வருவதற்கு முன் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்? எப்படி ஜெயித்துக் காட்டினார் என்பது குறித்து ஆஸ்கார் மூவீஸ் நிறுவன தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
டிஆருக்கு மாயவரம் தான் அவரது சொந்த ஊர். அப்போ காலேஜ் படிக்கும்போது லோக்கல் டிரெயின்ல தான் போவாரு.
அப்போ நோட்டுப் புத்தகத்துல தான் தாளம் போடுவாரு. டிஆருக்குன்னு அவரோட ஸ்டைலுக்கு ஒரு குரூப் செட்டாயிடுச்சு. 'தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி', 'கூடையில கருவாடு'ன்னு சில பாடல்கள் டிரெய்ன்ல போற அனுபவத்தை வச்சே அவருக்குக் கிடைச்சிருக்கு.
அப்படியே எம்ஏ. வரை படிச்சிருக்காரு. 16 வயதினிலே, உதிரிப்பூக்கள்னு சினிமாவைப் பார்த்து அவருக்கு ஒரு மோகம் வருது. அப்போ அவருக்கு தாடி தான் ஸ்பெஷல். அப்போ சினிமாவுக்காகத் தாடியை எடுத்துட்டு சினிமாவுக்குப் போகலாம்னு உறவினர் ஒருவரிடம் காசு கேட்டுருக்காரு. 'உன் மூஞ்சிக்கு சினிமா எல்லாம் ஒரு கேடா?'ன்னு கமெண்ட் அடிச்சாங்களாம்.

அது அவரு மனசுக்குள் ஆழமாப் பதிந்து இந்த தாடியோடவே நான் சினிமாவுல போய் ஜெயிச்சிக் காட்டுறேன்னு சொன்னாராம். அதனாலதான் தாடி வச்சிக்கிட்டு நடிச்சிருக்காரு. ஒரு தலை ராகம் எல்லாம் அப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்துல யாருமே தாடியோடு நடிச்சது கிடையாது. அந்தக் கால ஹீரோக்கள் தாடியை எடுத்து க்ளீன் ஷேவ் பண்ணிருக்கணும்.
சின்னதா மீசை வச்சிருக்கணும். இதுதான் ட்ரெண்ட். ஆனா அதை உடைச்சிட்டு தாடியோடு நடித்து ஜெயிச்சிக் காட்டுனவர் தான் டிஆர். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையே படமாக்கினார். அதுதான் ஒரு தலை ராகம். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. மாபெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.