இளையராஜாவை அடியோடு மாற்றிய சம்பவம்... எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கேள்விதான்..!

இளையராஜா ஆரம்பகாலங்களில் ரொம்பவே சாது. எல்லாரிடமும் சகஜமாகப் பழகுவாராம். மீடியாக்களிடம் ரொம்ப நல்லா பேசுவாராம். அதன்பிறகு ஒரு சம்பவம் நடந்தது. அதுதான் இளையராஜாவை ரொம்பவே மாற்றி விட்டது. பத்திரிகைக்காரங்க இளையராஜாவை சூழ்ந்து கொண்டார்கள். அப்போது கேட்ட கேள்வி இதுதான்.

நீங்க இசையை எவ்வாறு வரையறை செய்றீங்க? அதுக்கு இளையராஜா சொன்ன விலாவாரியான பதில் தான் நிறைய வம்பு தும்புகளையும் இழுத்துவிட்டது. மனதில் பட்டதை எல்லாம் சொல்லி விட்டார் இளையராஜா. அப்படி என்ன சொன்னாருன்னு பாருங்க.

இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில மட்டும் இருப்பதா நான் நினைக்கல. கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனா அப்படி அல்ல. உலகத்துல உள்ள எல்லாத்துலயுமே இசை இருக்கு. ஒரு ராகம், ஒரு தாளம் இருக்கு. மழைத்துளி மண்ணில விழுந்தாலும் இசை இருக்கு.

குழந்தை நடந்தாலும் இசை இருக்கு. ஓடும் நதி, ஓங்கி விழும் அருவி அவ்வளவு ஏன் நாய் ஊளையிட்டாலும் இசை இருக்கு. நல்லா கவனிச்சா தெரியும். உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்குன்னு சொன்னார்.

அதற்கு சில பத்திரிகைகள் போட்ட தலைப்பு ரணகளமாகி விட்டது. 'நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒண்ணுதான்'னு இளையராஜா பேட்டி கொடுத்துருக்காருன்னு போட்டுட்டாங்களாம்.

அதுக்கு பலரும் கேள்வி எழுப்ப, அப்பவும் இளையராஜா விடவில்லையாம். ஒரு நாய் ஊளையிடுறதைக் கேளுங்க. அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா? நாய் ஊளையிடுறதுக்கும் வித்வான்கள் பாடுறதுக்கும் வித்தியாசம் இல்லை.

உண்மையில் வெவ்வேறு நேரங்கள்ல ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறதுன்னு கூட நான் இசைக்குறிப்புகளை எழுதி வச்சிருக்கேன். இது என் எண்ணத்தை நிரூபிக்கிறது. ஒலிதான் இசையே தவிர வேறல்லன்னு சொல்லிவிட்டாராம். கர்நாடக சங்கீத வித்வான்கள் கொதித்துப் போனார்களாம்.

அந்தப் பிரச்சனைகளில் இளையராஜா ரொம்பவே சிக்கி சின்னாபின்னமானார். அப்புறம் தான் ஒரு முடிவுக்கு வந்தாராம். இனி மீடியாக்களிடம் தேவை இல்லாமல் பேசக்கூடாதுன்னு. எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் ஆனாலும் சொல்லும் சொல் தான் பெரிசு என்பதைத் தான் இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.

Related Articles
Next Story
Share it