புதிய செய்தி தொலைக்காட்சியை தொடங்கும் முயற்சியில் விஜய்

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் விஜய். இப்போது அரசியலில் களம் இறங்கியிருக்கிறார். ஒரு அரசியல்வாதியாக சமீபத்தில் அவர் நடத்திய மாநாட்டில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். கட்சியின் கொடி மற்றும் சின்னம் இவற்றை அறிமுகப்படுத்திய விஜய் அதிலிருந்து எந்தவொரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அவர் நடத்தவில்லை.

வெறும் அறிக்கை மூலமாகவே தனது தொண்டர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தார். அதனால் இப்படி அமைதியாக இருக்கும் இவர் எப்படி அரசியலில் சரி படுவார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். அந்தளவுக்கு தனது ஆக்ரோஷமான பேச்சால் விமர்சித்தவர்களின் வாயை அடைத்தார்.

மாநாடு முடிந்ததும் வழக்கம் போல பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக இப்போது வரை சீமான் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆரம்பத்தில் தம்பி தம்பி என பாசமழை பொழிந்தவர் மாநாட்டில் விஜய் அவருடைய கொள்கையை அறிவித்த பிறகு சீமானின் கோபத்திற்கு ஆளானார் விஜய்.

இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததும் தனியாக ஒரு சேனலை ஆரம்பிப்பாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது. ஜெயலலிதா ஜெயா தொலைக்காட்சி, விஜயகாந்தின் கேப்டன் டிவி, கலைஞர் டிவி என அவரவர் சேனலை தொடங்கி வைத்திருக்கும் நிலையில் இந்த வரிசையில் விஜயும் இணைவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாநாட்டிற்கு பிறகு முதல் கட்சி பொதுக்குழு கூட்டத்தை இன்று விஜய் தனது நிர்வாகிகளுடன் நடத்தி வருகிறார். அந்த கூட்டத்தில் புதிய செய்தி தொலைக்காட்சியை தொடங்கும் முயற்சியில் இருப்பதாக தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *