Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து படிப்படியாக முன்னேறி தற்போது ஹீரோவாக மாறி இருப்பவர் நடிகர் மணிகண்டன். இவரை நடிகராக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் நன்றாக வசனம் எழுதுவார். கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட், மிமிக்ரி கலைஞர் என இவருக்கு பல முகங்கள் இருக்கிறது.
மறைந்த நடிகர் டெல்லி கணேசை வைத்து ஒரு திரைப்படத்தை இவர் இயக்கி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. மாதவன் – விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியவர் இவர்தான். அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் இவர் வசனம் எழுதி இருக்கிறார். குட் நைட் திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக நடிக்க துவங்கியவர் அதன்பின் லவ்வர், குடும்பஸ்தன் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி இருக்கிறார்.
சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன் வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஆங்கிலம், சைனீஸ், கொரியன் போன்ற மற்ற மொழி திரைப்படங்களுக்கு தமிழில் டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தார் மணிகண்டன். பல கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். நேற்று வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் தமிழ் வெர்சனுக்கு அப்படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு குரல் கொடுத்தவர் மணிகண்டன்தான்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ரிஷப் ஷெட்டி ‘மணிகண்டன் அஜித் சார் போல மிமிக்ரி செய்து பேசிய வீடியோ ஒன்றை பார்த்தேன். அஜித் சார் இளமையாக இருக்கும் போதும். அதன்பின் அவரின் குரல் மாறிய போதும் என இரண்டு குரல்களிலும் அசத்தலாக பேசினார்.
எனவே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஒரு டப்பிங் கலைஞர் குரல் மட்டும்தான் கொடுப்பார். ஆனால் ஒரு நடிகரால்தான் ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும். அந்த வகையில் காந்தாரா சாப்டர் ஒன் தமிழில் என் கதாபாத்திரத்திற்கு மணிகண்டன் உயிர் கொடுத்து இருக்கிறார்’ என பாராட்டி பேசி இருக்கிறார்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com


