இதுக்கு காசெல்லாம் கேட்க மாட்டோம்!.. இளையராஜாவை சொல்கிறாரா பிரேமலதா விஜயகாந்த்!...
Vijayakanth: தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகராக இருந்தவர் விஜயகாந்த். மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து, அவமானங்களை சந்தித்து வாய்ப்பை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். துவக்கம் முதலே ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க துவங்கியவர் இவர்.
விஜயகாந்த் படம் என்றால் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும் என்றே ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள். கிராமப்புறங்களில் ரஜினியை விட விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம், ரசிகர் மன்றங்களும் அதிகம். விஜயகாந்த் சினிமாவில் மட்டுமே ஹீரோ இல்லை. நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருந்தவர்.
கஷ்டம் என யார் அவரிம் போனாலும் தன்னால் என்ன முடியுமோ அதை செய்து அவர்களுக்கு உதவுவார். பசியோடு இருந்த பல சினிமா கலைஞர்களுக்கு சாப்பாடும் போட்டார். அதனால்தான், அவர் இறந்தபோது கலை உலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இப்போது விஜயகாந்த் இல்லை என்றாலும் திரைப்படங்கள் அவரை ரசிகர்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறது. விஜயின் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷை தீவிர விஜயகாந்த் ரசிகராக காட்டியிருந்தனர்.
படத்தில் பல இடங்களில் விஜயகாந்தின் போஸ்டரையும், பாடல்களையும் பயன்படுத்தி இருந்தார்கள். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் ‘திரைப்படங்களில் கேப்டனின் பாடல் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை எல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல. மக்களின் சொத்து’ என பேசியிருக்கிறார்.
தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் தனக்கு காப்புரிமை கொடுக்க வேண்டும் என இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில்தான், கேப்டன் மக்களின் சொத்து என பேசியிருக்கிறார் பிரேமலதா.